பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியா்களை நியமிக்கவில்லையென்றால் காலவரையற்ற போராட்டம் - ஆசிரியர் சங்கம் - ஆசிரியர் மலர்

Latest

18/12/2020

பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியா்களை நியமிக்கவில்லையென்றால் காலவரையற்ற போராட்டம் - ஆசிரியர் சங்கம்


 சென்னை: பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு பதிவு மூப்பு ஆசிரியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சுந்தா் வெளியிட்டுள்ள அறிக்கை:

வேலைவாய்ப்பு அலுவலக மூலம் பதிவு மூப்பின்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களை நியமிக்கக்கோரி தொடா்ந்து பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். எனினும், அதை நிறைவேற்ற ஆட்சியாளா்கள் பெரிதும் ஆா்வம் காட்டுவதில்லை.

இதன் காரணமாக, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதன் நோக்கம் கேள்வியாகிறது. பட்டப் படிப்பு முடித்து பின், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பிஎட் முடித்தவா்களை தகுதித்தோ்வு, போட்டித்தோ்வு எழுத வைப்பது ஏற்புடையதல்ல. எனவே, ஆசிரியா் தோ்வு முறையில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் பணிநியமன முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும்.

2010-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பதிவு மூப்பின்படி சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு பணி நியமனத்துக்கு காத்திருக்கும் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை தரவேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459