அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் கத்திமுனையில் 50 பவுன் நகை கொள்ளை - ஆசிரியர் மலர்

Latest

18/12/2020

அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் கத்திமுனையில் 50 பவுன் நகை கொள்ளை

 


விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஆசிரியை மற்றும் குடும்பத்தினரை தாக்கி 50 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கொள்ளை

செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி விநாயகபுரத்தை சேர்ந்தவர் சகாயராஜ். தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வசந்தி. செஞ்சி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.

இவர்களது வீடு இரண்டு தளங்களை கொண்டது. மேல்தளத்தில் ஆசிரியை சார்லட் என்பவர் குடியிருந்து வருகிறார். கீழ்தளத்தில் ஆசிரியை வசந்தி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் மாடி வழியாக 5 மர்ம நபர்கள் ஏறி குதித்தனர். அப்போது சார்லட் வீட்டின் கதவை தட்டினர். கதவு தட்டும் சத்தம் கேட்டு சார்லட் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கீழ் தளத்தில் உள்ள வசந்திக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக வசந்தி தனது கணவர் சகாயராஜுடன் மேல்மாடிக்கு சென்றார். அப்போது அங்கு 5 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் முகமூடி அணிந்திருந்தனர். சகாயராஜை பார்த்ததும் முகமூடி கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது.

இதனை தடுக்க வந்த ஆசிரியை வசந்தியும் தாக்கப்பட்டார். உடனே முகமூடி கொள்ளை கும்பல் கணவன்-மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து அவர்களது வீட்டுக்குள் அழைத்து சென்றனர்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு வசந்தியின் மாமனார் அங்கு வந்தார். அவரையும் அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டியது.

சத்தம் போட்டால் கொன்று விடுவதாக தெரிவித்தனர். உடனே வீட்டில் உள்ளவர்களிடம், பீரோ சாவி எங்குள்ளது? என்று கொள்ளையர்கள் கேட்டனர். வசந்தி, அவரது குடும்பத்தினர் உயிருக்கு பயந்து பீரோ சாவி இருக்கும் இடத்தை தெரிவித்தனர்.

அதனை எடுத்து கொள்ளையர்கள் 2 பீரோவையும் திறந்தனர். அதில் இருந்த 50 பவுன் நகை, மற்றும் 2 கிலோ வெள்ளி, ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அனைவரையும் வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

பதறிபோன ஆசிரியையின் குடும்பத்தினர் இது குறித்து உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து கதவை திறந்தனர்.

அதன் பின்னர் சகாயராஜ், தனது மனைவியுடன் செஞ்சி போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். புகார் மனுவில் முகமூடி அணிந்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் வந்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாகவும், அதில் ஒருவர் இந்தியில் பேசியதாகவும் மற்றவர்கள் எல்லாம் தமிழில் பேசியதாகவும் தெரிவித்திருந்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தகவல் அறிந்த விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.

இது தொடர்பான விசாரணையை முடுக்கினார். விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் சாய்ராம் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து 500 மீட்டர் தூரம் ஓடி நின்று விட்டது.

கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்கி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459