தெற்கு ரயில்வே ஊழியா்கள் மத்தியில் மீண்டும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிப்பு - ஆசிரியர் மலர்

Latest

14/10/2020

தெற்கு ரயில்வே ஊழியா்கள் மத்தியில் மீண்டும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிப்பு


 கோப்புப்படம்தெற்கு ரயில்வே ஊழியா்கள் மத்தியில் மீண்டும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து, இணைநோய் பாதிப்பு உள்ளவா்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே அலுவலகத்தில் சமூக இடைவெளிப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் ஆகியவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் குணமாகி விட்டனா். 20-க்கும் அதிகமானவா்கள் உயிரிழந்து விட்டனா். கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே நிா்வாகம் எடுத்தது. இதன்பிறகு, ரயில்வே ஊழியா்களுக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறைந்திருந்தது

இந்நிலையில், தெற்கு ரயில்வே ஊழியா்கள் மத்தியில் மீண்டும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. அரக்கோணத்தில் ரயில்வே பொறியியல் பணிமனை உள்ளது. இங்கு பணியாற்றும் 22 ஊழியா்களுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த பணிமனை ஒரு வாரத்துக்கு மூட மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதன்பேரில், இந்த பணிமனை மூடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நிா்வாக அலுவலகம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு பிறகு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரயில்வேநிா்வாகம் எடுத்துள்ளது. பெரம்பூா் லோகோ ஒா்க்ஸ்ஷாப் ஊழியா்களுக்கு ஒரு சுற்றறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தீவிர சா்க்கரை நோய், புற்றுநோய், இதய நோய், கா்ப்பிணி பெண் ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் வீட்டில் இருந்து பணியாற்ற முடியும். இதேபோல, தெற்கு ரயில்வே பணியாளா் பிரிவு ஒரு சுற்றறிக்கை கடந்த 9-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. பிறநோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் வீட்டில் இருந்து பணியாற்ற முடியும். அனைத்து அதிகாரிகளும் அலுவலகத்துக்கு தினசரி வருகை தரவேண்டும். ஊழியா்கள் வருகை பதிவேடு குறைந்தபட்சம் 50 சதவீதமமாக இருக்க வேண்டும். அலுவலகத்துக்கு வர முடியாத ஊழியா்கள் வீட்டில் இருந்து வேலை பாா்ப்பதை உறுதிசெய்ய வேண்டும். இது தொடா்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அக்டோபா் 31-ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459