மதுரை,
மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரித்தனர். அப்போது மதுரையைச் சேர்ந்த வக்கீல் பிரசன்னா ஆஜராகி, “அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு கடந்த மார்ச் மாதம் அமைக்கப்பட்டதுஇந்த குழுவில், சுகாதாரத்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், சட்டத்துறை செயலாளர் உள்ளிட்ட 6 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த குழு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆலோசனை செய்து, அதன் அடிப்படையில் அறிக்கையையும் தாக்கல் செய்தது. இந்த அறிக்கைக்கு அரசு ஒப்புதல் வழங்கியது. பின்னர் அந்த அறிக்கையை கவர்னரின் அனுமதிக்காக அனுப்பியது. இந்தநிலையில் சமீபத்தில் நடந்த நீட் தேர்வின் முடிவுகள் இந்த வாரம் வெளியாக உள்ளது.
நீதிபதி கலையரசன் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தாமல் நீட் தேர்வு முடிவை வெளியிட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே நீட் தேர்வு முடிவை இந்த குழு பரிந்துரையை அமல்படுத்திய பின்பு வெளியிடும்படி உத்தரவிட வேண்டும். இதுதொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வக்கீலின் முறையீட்டை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment