இணைய சிக்னல் கிடைக்காமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த இயலாத பிரச்சனைகளுக்கு தீர்வு காண குழு அமைப்பு. அமைச்சர் செங்கோட்டையன் - ஆசிரியர் மலர்

Latest

02/10/2020

இணைய சிக்னல் கிடைக்காமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த இயலாத பிரச்சனைகளுக்கு தீர்வு காண குழு அமைப்பு. அமைச்சர் செங்கோட்டையன்

 



ஈரோடு: இணைய சிக்னல் கிடைக்காமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த இயலாத 52 கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காண குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.  

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: பவானிசாகர் அணை ஆகஸ்ட் மாதம் பாசனத்திற்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால் அணைக்கான நீர்வரத்து திருப்திகரமாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் குறையாமல் தொடர்ந்து அதே நிலை நீடிப்பதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.

கரோனா நோய் பரவல் தடுப்பதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் இருப்பதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெண்கள் சுயமாக வேலைக்குச் செல்ல வசதியாக இலவச இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டம் மூலம் ஆண்டொன்றுக்கு 1 லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளிகள் திறப்பதற்கான சூழல் தற்போதைக்கு இல்லை. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்கு தேவையான பாடப்புத்தகங்கள் கூடுதலாகவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு இலவச மடிக்கணினி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவது கரோனா பரவல் காரணமாக தாமதமாகி வருகிறது.

சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. வேலைவாய்ப்புகள் அதிக அளவில் கிடைத்து வருகிறது. வெளிமாநிலங்களுக்கு வேலைக்காக சென்றவர்கள் கூட தற்போது மீண்டும் தமிழகம் திரும்பி வரும் நிலை இருந்து வருகிறது.  தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான கட்டமைப்பு மற்றும் அனுமதி எளிதாக கிடைக்கிறது. எனவே தமிழக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

தமிழகத்தில் மலைக்கிராமங்கள் உள்பட 52 பின்தங்கிய கிராமங்களில் இணையதள சிக்னல் கிடைக்காமல் உள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண குழு அமைக்கப்பட்டு விரைவில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.  

மாநிலம் முழுவதும் 14 தனியார் பள்ளிகள் மீது கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தது. இதில் 5 பள்ளிகள் சரியான விளக்கம் அளித்துள்ளனர். மீதமுள்ள 9 பள்ளிகள் மீது நீதிமன்ற உத்தரவின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 
 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459