நாடு முழுவதும் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் கொரோனா தொற்றுப் பரவலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொற்று அபாயம் இருப்பதால், பல மாநிலங்களில் இப்போதுவரை பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. சில மாநிலங்களில் பள்ளிகள் திறந்திருந்தாலும் கர்நாடகாவிலும் இன்னும் திறக்கப்படவில்லை.
ஆனால், தொற்று நோய்களின்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சொல்லிக்கொடுக்க கிராமத்திற்கே ஆசிரியர்களை ’வித்யகமா’ திட்டத்தின்கீழ் அனுப்பி வருகிறது கர்நாடக அரசு. அதன்படி, ஆசிரியர்கள், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கிராமங்களுக்குச் சென்று கிராமப்புற மாணவர்களை இணைத்து பாடம் கற்பித்து வருகிறார்கள். அதில்தான், தற்போது கொரோனா பரிசோதனை செய்தபோது 34 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில், 30 மாணவர்கள் திம்மாபூர் கிராமத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ளவர்கள் அருகிலுள்ள மாஷல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், கிராமவாசிகள் ஆசிரியர்களை தங்கள் கிராமத்திற்குள் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். பள்ளி மாணவர்களோடு சேர்த்து ஆறு பெரியவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வித்யகமா திட்டத்தின்படி வகுப்புகள் நடத்த அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment