பள்ளிகளில் அமலுக்கு வரவுள்ள 3 புதிய உத்தரவுகள் - ஆசிரியர் மலர்

Latest

22/05/2024

பள்ளிகளில் அமலுக்கு வரவுள்ள 3 புதிய உத்தரவுகள்

1251437
வரும் கல்வி ஆண்டில், பள்ளிகளில் 3 புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்த பிறகு வரக்கூடிய ஜூன் மாதம் 10ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் 3 புதிய நடவடிக்கைகள் அமலுக்கு வர இருப்பதாகவும் பள்ளிக்கல்விதுறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போதைப்பொருட்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.பள்ளி மாணவர்கள் மத்தியிலும் போதைப்பொருட்கள் பழக்கம் அதிகம் இருப்பதாக ஏற்கனவே அரசு மாதிரி பள்ளிகளுக்கான உறுப்பினர் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்திருந்தார். பள்ளி மாணவர்கள் இடையே போதை பழக்கம் என்பது இருப்பதாகவும் கல்வித்துறைக்கு புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் பள்ளி வளாகங்களில் போதை பொருட்கள் நடமாட்டத்தை அதே போன்று மாணவர்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது.இரண்டாவதாக தமிழகம் முழுவதும் 1 கோடியே 25 லட்சம் மாணவர்களுடைய பெற்றோர் மொபைல் எண்களை ஒருங்கிணைத்து வாட்ஸ் அப் மூலமாக மாணவர்களின் தினசரி செயல்பாடுகளை பெற்றோர்களுக்கு தெரிவிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 


இது தொடர்பான நடவடிக்கைகளும் ஜூன் மாதம் அமலுக்கு வர இருக்கிறது. தற்போது வரை 70 லட்சம் மொபைல் எண்கள் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. மீதம் இருக்கக்கூடிய மொபைல் எண்களும் பள்ளி திறந்ததும் உறுதி செய்யப்பட இருக்கிறது.3வதாக மாணவர்கள் தங்கள் சமூகத்தின் அடையாளங்களை வர்ணக்கயிறுகளாக அணிவதற்கு தடை விதிக்கப்பட இருக்கிறது என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென் மாவட்டங்களில் அடிக்கடி மாணவர்கள் மத்தியில் கைகளில் பலவகையான வண்ண கயிறுகளை கட்டுவதால் அவர்களுன் மோதல் ஏற்படுகிறது.


 கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. பள்ளி கல்லூரிகளில் இது போன்ற மத அடிப்படையிலான செயல்பாடுகளை தவிர்க்கும் நோக்கில் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு அந்த குழுவின் அறிக்கை தமிழக அரசுக்கு சமர்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.எனவே இந்த 3 விவகாரங்களும் பள்ளி திறந்த பிறகே அமலுக்கு வரும் என்றும் பள்ளி மாணவர்கள் வண்ண கயிறுகளை அணிவதற்கு தடை விதிக்கப்பட இருப்பதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


ஏற்கனவே உயர் அதிகாரிகள் அளவில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 


மிக விரைவில் முதல்வருடைய அனுமதியை பெற்று இது தொடர்பான செயல் பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459