பத்தாம் வகுப்புக்கு அலகுத்தேர்வு அட்டவணை ரிலீஸ்! - ஆசிரியர் மலர்

Latest

03/01/2024

பத்தாம் வகுப்புக்கு அலகுத்தேர்வு அட்டவணை ரிலீஸ்!

 பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, அலகுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கான தேர்வுகள் இடம்பெறவில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் 26ம் தேதி துவங்கி, ஏப்ரல் 8ல் நிறைவடைகிறது. எட்டாம் வகுப்பு வரை, ஆல்பாஸ் நடைமுறை உள்ளதால், பத்தாம் வகுப்பு ரிசல்ட்டில், பின்தங்குவது தொடர்கிறது.


 குறிப்பாக, கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, பிளஸ் 1, பிளஸ் 2 ரிசல்ட்டில், மாநில தரப்பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறது.பத்தாம் வகுப்பில் மட்டும், தொடர்ந்து பின்தங்கி வருகிறது. எனவே, நடப்பாண்டில் திருப்புதல் தேர்வுகளுக்கு இடையே, அலகுத்தேர்வு நடத்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மொழிப்பாடங்கள் தவிர, மற்ற மூன்று பாடங்களிலும், தலைப்புகள் முன்கூட்டியே அறிவித்து தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பாடமாக பிரித்து தேர்வு நடத்துவதால், மாணவர்களால் அனைத்து பாடங்களும் படித்து, சுயபரிசோதனை செய்து கொள்ள முடியும்.ஜனவரி மாதத்திற்கான அலகுத்தேர்வு, நாளை (ஜன.,3ம் தேதி) துவங்கி வரும் 11ம் தேதியுடன் நிறைவடைகிறது.

 மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. வினாத்தாள் பள்ளிகளுக்கு, இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும். இதை நகலெடுத்து தேர்வு நடத்தி, விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதோடு, பதிவேற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், அலகுத்தேர்வு நடத்துவதால், மாணவர்களால் அனைத்து பாடங்களையும் படிக்க முடியும். ஆனால், இதில், தமிழ், ஆங்கில பாடங்கள் இடம்பெறவில்லை.மொழிப்பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதும், அதிக மதிப்பெண்கள் பெறுவதும் அவசியம். எனவே, மொழிப்பாடங்களையும் அலகுத்தேர்வு அட்டவணையில் இணைக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459