தமிழகத்தை உலுக்கும் இன்ப்ளூயன்சா காய்ச்சல்.. 9ம் வகுப்பு வரை விடுமுறை விடுங்க- ராமதாஸ் அவசர கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

17/09/2022

தமிழகத்தை உலுக்கும் இன்ப்ளூயன்சா காய்ச்சல்.. 9ம் வகுப்பு வரை விடுமுறை விடுங்க- ராமதாஸ் அவசர கோரிக்கை


 


தமிழகத்தில் குழந்தைகள் மத்தியில் பரவி வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் தற்போது இன்புளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன், தமிழகத்தில் தற்போது புதுவகை காய்ச்சல் பரவி வருகிறது. தற்போது பரவும் காய்ச்சலின் உண்மை நிலையை அறிவிக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தை பொருத்தவரை இன்புளுயன்சா காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை அரசு மருத்துவமனையில் 202 பேரும், தனியார் மருத்துவமனையில் 215 பேரும், வீடுகளில் 54 குழந்தைகள் என மொத்தம் 282 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.!


வழிகாட்டு நெறிமுறை


திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி, தலைவலி, மூக்கடைப்பு, உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை இன்புளுவென்சா காய்ச்சலின் அறிகுறிகள் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேற்கண்ட அறிகுறிகளுடன் பொதுமக்கள் வந்தால் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.


மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவு

லேசான அறிகுறிகள் கொண்டவர்கள் 48 மணி நேரத்திற்கு மருத்துவ கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 அல்லது 5 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள், தீவிரமான சுவாச பிரச்சனை கொண்டவர்கள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் என எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடிய நபர்களுக்கு அறிகுறிகள் கண்டறிந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் ஆசெல்டமிவிர் மற்றும் தேவைப்படும் மருந்துகளை வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.


காய்ச்சல் அதிகரிப்பு


புதுச்சேரியில் காய்ச்சல் பரவி வருவதால் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் 11 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது.


டாக்டர் ராமதாஸ்


இன்னொருபுறம் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. எந்தெந்த பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது என்பதைக் கண்டறிவதற்கு சோதனையோ, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. இது காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவ வகை செய்து விடும். தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வகையான காய்ச்சல்கள் பரவுகின்றன? நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.


விடுமுறை விட வேண்டும்


அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும். குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத் தான் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தோன்றுகிறது. குழந்தைகளைக் காக்கவும், நோய்ப்பரவலை கட்டுப்படுத்தவும், நிலைமை சீரடையும் வரை 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459