புதுச்சேரியில் பரவும் வைரஸ் காய்ச்சல்.. 1 முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! - ஆசிரியர் மலர்

Latest

16/09/2022

புதுச்சேரியில் பரவும் வைரஸ் காய்ச்சல்.. 1 முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

  புதுச்சேரியில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலால், பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை விடுமுறை அளித்துள்ளது.புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. அதிலும்  பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த காய்ச்சல் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான குழந்தைகள் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தக் குழந்தைகள் வாயிலாக பிற குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் காய்ச்சல் பரவி வருகிறது. தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் அவர்கள் காய்ச்சலுடன் பள்ளிகளுக்கு வருகின்றனர். இதனால் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


சுகாதாரத்துறை


அதுமட்டுமல்லாமல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இது மழைக் காலத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல் தான் என்றும், இதனை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது.


மாணவர்கள் பாதிப்பு


அதேபோல் காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே காய்ச்சல் அதிகரிப்பால் மாஸ்க், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சில நாட்களுக்கு 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும். இந்த நடவடிக்கை வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க உதவியாக இருக்கும் அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது.


பள்ளிகளுக்கு விடுமுறை


இந்த நிலையில் புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது. நாளை முதல் செப்.25ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது. தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இது பொருந்தும். சுகாதாரத்துறையினர் பரிந்துரையை ஏற்று பள்ளிக் கல்வித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


தமிழ்நாட்டிலும் காய்ச்சல் பரவல்


இதன்மூலம் புதுச்சேரியில் காய்ச்சல் மற்றும் சளி உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளிலும் குழந்தைகள், மாணவர்கள் ஏராளமானோர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டது.,

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459