CBSE : விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்; ஜூலையில் தேர்வு முடிவு? - ஆசிரியர் மலர்

Latest

19/05/2022

CBSE : விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்; ஜூலையில் தேர்வு முடிவு?

 சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத் தேர்வை எழுதிய மாணவ, மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியிருக்கிறது.


வழக்கம் போல இல்லாமல், இந்தாண்டு விடைத்தாள்களைத் திருத்தும் பணி மிக வேகமாக அதே வேளையில் இரண்டு முறை மதிப்பிடும் வகையில் சிபிஎஸ்இ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


ஏற்கனவே விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கும் முறை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், விரைவாக விடைத்தாள்களை திருத்தி, குறித்த நேரத்துக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 22 விடைத்தாள்களை திருத்த வேண்டும் என்ற நடைமுறைஇருந்த நிலையில், இது தற்போது 35 விடைத்தாள்கள் என்று மாற்றப்பட்டுள்ளது.  முடிந்த வரையில் விடைத்தாள்களை இரண்டாம் முறை மதிப்பிடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.


எனினும், விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, இரண்டாம் பருவத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகாத நிலையில், ஜூலை மாதத்துக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.


கடந்த மாதம் இறுதியில் தொடங்கிய பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு மே 24ஆம் தேதியும், பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு ஜூன் 15ஆம் தேதியும் நிறைவடையவிருக்கிறது.


வழக்கமாக தேர்வு முடிந்து 20 நாள்களுக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ இலக்கி நிர்ணயித்தாலும் ஒரு மாதத்துக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும். இந்தமுறை அதைக் காட்டிலும் மிகக் குறுகிய காலத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 


எனவே, இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியிலோ அல்லது ஜூலை மாதம் முதல் வாரத்திலோ தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459