ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியது இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் செயல்! தமிழக அரசின் அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரி மார்ச் 3ல் போராட்டம் நடத்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு - ஆசிரியர் மலர்

Latest

25/02/2021

ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியது இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் செயல்! தமிழக அரசின் அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரி மார்ச் 3ல் போராட்டம் நடத்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு

 



ஊடகச் செய்தி

                                                             மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 05/2021  நாள்: 25.02.2021                

ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திது

இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் செயல்!

தமிழக அரசின் அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரி

மார்ச் 3ல் போராட்டம் நடத்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு.

       தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்110ன் கீழ் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 லிருந்து 60 ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஏற்க முடியாத ஒன்றாகும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை முற்றிலுமாகப் பறித்துள்ள இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெறக்கோரி மாநிலம் முழுவதும் மார்ச் 3 ஆம் தேதி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

            இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை.

       தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏற்கனவே 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தியபோதே பொதுநலன் கருதி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அதைக் கடுமையாக எதிர்த்தன.

          இந்நிலையில் தற்போது ஓய்வு பெறும் வயதை 59 லிருந்து 60 ஆக உயர்த்தி சட்டமன்றப் பேரவை விதி எண்110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்திருப்பது தமிழகத்தில் படித்துவிட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு வேலைக்காகக் காத்திருக்கும் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.

         தமிழ்நாடு அரசின் தேவையற்ற இந்த அறிவிப்பை பெரும்பாலான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விரும்பவில்லை. மேலும், பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

         அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் எதையும் 110 விதியின் கீழ் நிறைவேற்றி அறிவிப்பு வெளியிடாத முதலமைச்சர், அரசு ஊழியர்கள் கேட்காத ஒன்றை 110 விதியின் கீழ் அறிவித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

          ஏற்கனவே 5 லட்சம் கோடிக்கு மேல் கடன் சுமையில் உள்ள தமிழக அரசு, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஓய்வுக் காலப் பலன்களை அளிப்பதைத் தவிர்ப்பதற்கே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பெரும்பாலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

        ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வுக்காலப் பலன்களையும், ஓய்வூதியத்தையும் பெற முடியாமல் அல்லல்படுவதையும், ஓய்வூதியம் பெறுவதற்கே அவர்கள் மாதந்தோறும் போராடிக் கொண்டிருப்பதையும் பார்க்கும் போது அனைத்துத் துறையினருக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தையும் இந்த அறிவிப்பு ஏற்படுத்தியுள்ளது.

           இளைஞர்களின் வேலைவாய்ப்பை முற்றிலுமாகப் பறிக்கும் இந்த அறிவிப்பை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட அமைப்புக்களின் சார்பில் தனித்தோ அல்லது தோழமை அமைப்புக்களுடன் இணைந்தோ மார்ச் 3 ஆம் தேதியில் ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு முடிவு செய்துள்ளது.

இப்படிக்கு,
ச. மயில்
பொதுச்செயலாளர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459