கரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு ஊழியர்களிடையே அச்சம் - ஆசிரியர் மலர்

Latest

20/07/2020

கரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு ஊழியர்களிடையே அச்சம்


கரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு உயிரிழப்பும் அதிகரிப்பதால் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களிடையே அச்சம் ஏற்பட்டு பணிக்குச் செல்லவே அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, கரோனா காலத்தில் மக்களுக்குத் தேவையான அத்திவாசியத் தேவைகள் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மின்வாரியம், காவல்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்டவற்றை அத்தியாவசியப் பணியாகக் கருதி அவர்களை அரசு பணியில் ஈடுபடுத்திவருகிறது. அவர்களில் கரோனா ஏற்படுபவர்களுக்கு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர்கள் எனக் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், சிகிச்சை மேற்கொண்டு தற்போது வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் 147 கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வட்டாட்சியராக இருந்த கவியரசு, கரோனா களப் பணியில் தீவிரமாகப் பணியாற்றி வந்த நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு அரசு ஊழியர்களிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அரசு ஆணையைப் பின்பற்றி சுழற்சி முறையில் 50 சதவீத ஊழியர்களைப் பணியில் ஈடுபடுத்தவேண்டும் என்பதோடு, கரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினால்தான் களப் பணிக்குச் செல்வது என்ற தீர்மானித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவர் செங்கேணி கூறுகையில், ”அரசு அறிவித்த ஆணையை எந்த மாவட்ட ஆட்சியரும் பின்பற்றவில்லை. அனைவரையும் பணிக்கு வரச் சொல்கின்றனர். மேலும் என்.95 மாஸ்க் கூட வழங்கப்படவில்லை. ஊழியர்கள் தங்கள் சொந்த செலவில்தான் வாங்கி அணிந்து கொண்டு செல்கின்றனர்.
எனவே முகக்கவசம், கையுறை, கை சுத்தம் செய்யும் திரவம் உள்ளிட்டவற்றை வழங்கி, 50 சதவிகித ஊழியர்களைச் சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும், மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்குப் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்திக் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம்” என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459