ஜே.இ.இ., – நீட்’ தேர்வு குழப்பத்தில் மத்திய அரசு - ஆசிரியர் மலர்

Latest

26/06/2020

ஜே.இ.இ., – நீட்’ தேர்வு குழப்பத்தில் மத்திய அரசு



புதுடில்லி : கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ‘ஜே.இ.இ., – நீட்’ நுழைவுத் தேர்வு தேதி மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் உறுதியான முடிவு எடுக்க முடியாமல் மத்திய அரசு குழப்பத்தில் உள்ளது. அதேநேரத்தில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்களுக்கான 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அந்தந்த மாநில பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் போன்ற தொழில் கல்வி படிப்பதற்கான ஜே.இ.இ., முதன்மை நுழைவுத் தேர்வை ஜூலை 18 – 23ம் தேதிகளில் நடத்த என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. இதேபோல் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான ‘நீட்’ ஜூலை 26ல் நடக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்வு தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என மாணவர்களும் அவர்களது பெற்றோரும் வலியுறுத்தி வந்தனர்.
இதை மாணவர்கள் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனாலும் தேர்வு தேதியை மாற்றுவது தொடர்பாக உறுதியான முடிவு எடுக்க முடியாமல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பெரும் குழப்பத்தில் உள்ளது.
‘சிடெட்’ தேர்வு ஒத்திவைப்பு:
ஜூலை 5ம் தேதி நடக்க இருந்த ‘சிடெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார். ”நிலைமை சீரானபின் தேர்வு நடத்தப்படும்; புதிய தேதி அறிவிக்கப்படும்” என அவர்தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459