சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்தப் பொருளும் வாங்கப்படாது - ஐசிஎம்ஆர் - ஆசிரியர் மலர்

Latest

28/04/2020

சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்தப் பொருளும் வாங்கப்படாது - ஐசிஎம்ஆர்

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தரமற்ற மருத்துவ உபகரணங்களை கொடுத்த சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்தப் பொருளும் வாங்கப்படாது என்று ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. தரமற்ற ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை வழங்கியதை அடுத்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்கப்பட்டன. இந்த கிட்கள் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இந்த நிலையில், 2 சீனா நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்கள் தவறான முடிவுகளை தருவதாக ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் புகார்கள் எழுந்தன. இதையடுத்து புதிதாக வந்துள்ள ரேபிட் டெஸ்ட் கிட்டை கொண்டு இரண்டு நாட்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுக்கொண்டது. மேலும், ரேபிட் டெஸ்ட் கிட்டை மீண்டும் பயன்படுத்துவது குறித்த அறிவுறுத்தல் விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. இதன்பின்னர்,
மாநில அரசுகள் கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் எனவும் கொரோனாவை கண்டறிய பிசிஆர் டெஸ்ட் அவசியம் எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்தது.
இந்நிலையில் சீனாவின் Wondfo BioTech உள்பட 2 நிறுவனத்திடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என ஐசிஎம்ஆர் நேற்று தெரிவித்திருந்தது. இந்த டெஸ்ட் கிட்களை வாங்க மத்திய அரசு எந்த ஒரு முன்பணமும் கொடுக்கவில்லை என விளக்கம் அளித்திருந்தது. பழுதான கருவிகளை மாநில அரசுகள், மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தரமற்ற மருத்துவ உபகரணங்களை கொடுத்த சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்தப் பொருளும் வாங்கப்படாது என்று ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459