வங்கதேசத்தில் கொரோனா தொற்றுக்கு 3,388க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.  இதுவரை 110 பேர்  உயிரிழந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் உலக நாடுகள் அனைத்தும் முடங்கிக் கிடக்கும் நிலையில், வங்க தேசத்திலும் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட அதேநேரத்தில் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  ஒரே நேரத்தில் ஐந்துக்கும் அதிகமானவர்கள் கூடி தொழுகை நடத்தக் கூடாது என்று அங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பெரிய பள்ளிவாசல்கள் அனைத்தும் மூடப்பட்ட்டுள்ளன.

இந்நிலையில் பிரம்மன்பரியா என்ற மாவட்டத்தில் பிரபலமான மத போதகராக புகழ்பெற்றிருந்த மவுலானா சுபாயர் அஹ்மத் அன்சாரி உடல்நலக் குறைவால் திடீர் மரணமடைந்தார். அவருக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான அபிமானிகள் உள்ளனர். இந்நிலையில் அவரது இறுதி ஊர்வலத்திலும் இறுதிச் சடங்கிலும் பல்வேறு ஊர்களிலிருந்தும் வந்து திரண்ட 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் முகக் கவசம் கூட இல்லாமல் திரண்டனர். சமூக இடைவெளி என்பது காற்றில் பறந்துபோனது.
இவ்வளவு மக்கள் கூட்டத்தை எதிர்பார்க்காத போலீஸார் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் செய்வதறியாது மவுனித்து நின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அரசு ஆணையம் ஒன்றை அமைத்திருக்கிறது.
 
ஒரு லட்சம்பேர் கூடி சுமார் 7 மணிநேரம் ஒரே இடத்திலிருந்த நிலையில் இச்சம்பவத்தால் வங்க தேசத்தில் கரோனா தொற்று காட்டுத் தீபோல பரவுமோ என்ற அச்சம் நாடு முழுவதும் நிலவி வருகிறது. இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கலாமா வேண்டாமா என்பதைப் பற்றி பிரம்மன்பரியா மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது