ஊரடங்கை அடுத்து 10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில்,  அவற்றை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்த நிலையில், பொதுத்தேர்வுகளை மே மாதம் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பிளஸ் 2 பொதுத்தேர்வு தவிர அத்தனை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வைகோ, ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும், தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய ஆசிரியர் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுக்க மே 15ம் தேதி வரை  பள்ளிகள் மூட வாய்ப்பு உள்ளதால் பள்ளித் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 பாடப்பிரிவினை ஒதுக்கீடு செய்யலாம் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், பள்ளித் தேர்வுகளில் அந்தந்த பள்ளிகள் கடுமை காட்டி மதிப்பெண்ணைக் குறைத்துப் போட்டதால்
அதன் அடிப்படையில் தேர்வை முடிவு செய்வது சரியல்ல என பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை நடத்தியது. இதனையடுத்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வை மே மாதம் நடத்த  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தேர்வுகளை 10 நாட்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது.  பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு எதிர்கொள்ள தயாராக இருக்கும் படி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை மாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது