அரசு மாதிரிப் பள்ளிகளைத் தொடர்ந்து, அடுத்து வரும் ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கான பெரும் கனவுகளை வசமாக்கும் என்று பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் தெரிவித்தார். தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்பித்தலை மேம்படுத்துவதற்காக மாதிரிப் பள்ளி திட்டம் 2021-22-ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் மாவட்டத்துக்கு தலா ஒன்று வீதம் 38 மாதிரிப் பள்ளிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள், சிசிடிவி கேமரா, முழுமையான உப கரணங்களுடன் கூடிய அறிவியல் ஆய்வகம், டிஜிட்டல் கரும்பலகை, விளையாட்டு மைதானம், நுண்கலைத்திறன் பயிற்சி, உண்டு உறைவிட வசதிகள் என மாணவர்களுக்குத் தேவையான அனைத்து கட்டமைப்புகளும் ஒரே வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
இதற்கிடையே, இந்தப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் ஐஐடி போன்ற தேசிய அளவிலான முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 1,878 மாணவர்கள் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளனர். இதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தை ‘வெற்றிப் பள்ளிகள்’ எனும் பெயரில் வட்டார அளவில் கொண்டு செல்ல வேண்டுமென மாநிலக் கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டது.


No comments:
Post a Comment