வருகைப் பதிவு குறைவாக இருக்கும் மாணவரை தேர்வெழுத அனுமதிப்பது முறையாகாது, இது வருகைப் பதிவை வைத் திருக்கும் மாணவர்களை கேலிக்குள்ளாக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஸ்ரீரிஷ் என்பவருக்கு வருகைப் பதிவு குறைவாக இருந்ததால் செமஸ்டர் தேர்வெழுதவும். 2024-2025 கல்வி ஆண்டுக்கான வகுப்பை தொடரவும் அவரை அனுமதிக்கவில்லை. இதையடுத்து, ஸ்ரீரிஷ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீரிஷ் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன். சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரை தேர்வெழுத அனுமதிக்கும் படி கோரினார்.இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது என பலமுறை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அளவு வருகை பதிவு இல்லாத மாணவர்கள் தேர்வெழுத முடியாது என்று பல்கலைக்கழக மானியக்குழு கூறும் நிலையில் வருகைப் பதிவு குறைவாக இருக்கும் மாணவரை தேர்வெழுத அனு மதிப்பது முறையாகாது. இது வருகைப் பதிவை வைத்திருக்கும் மாணவர்களை கேலிக்குள்ளாக்கும். உரிய கட்டணத்தை செலுத்தி மீண்டும் படிப்பை தொடர மாணவர் விரும்பினால் அதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகத்திற்கு அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.



No comments:
Post a Comment