தலைநகரை மையங்கொண்டுள்ள ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்களின் போராட்டப்புயல் - ஆசிரியர் மலர்

Latest

29/09/2023

தலைநகரை மையங்கொண்டுள்ள ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்களின் போராட்டப்புயல்


 தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் 100 சதவீதம் நிறைவேற்றியதாக கூறியதால் அரசு ஊழியர் ஆசிரியர் சங்கங்கள் அடுத்தடுத்து போராட்டத்தை அறிவித்து வருகின்றன. 


புதிய ஓய்வூதியத் திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல் படுத்துவோம் என தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆனால் நுாறு சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக சமீபத்தில் முதல்வர் அறிவித்தார்.


இதையடுத்து பல்வேறு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள், அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.




 இன்று (செப். 29 ) தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி நடைபெற உள்ளது.



இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் ஊதிய முரண்பாடுகளை அகற்றக்கோரி உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்.  செப்.29, 30 ல் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. அக்.9 ல் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் காதில் பூ சூடும் போராட்டம் நடத்த உள்ளது.




அக்.13 ல் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ( டிட்டோ ஜாக்) 1,2,3 வகுப்புகளில் ஆன்லைன் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அக். 20, 21 ல் பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு சங்கங்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளன.


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் கூறியதாவது





 தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் இன்று (29.09.2023) சென்னை மாநகரில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் மாபெரும் சங்கமம் நடைபெற உள்ளது. நமது கோரிக்கைகளின் மீது தமிழ்நாடு அரசின் பாராமுகத்தை உடைத்தெறியும் பேரணி தான் இன்று நடைபெறவிருக்கும் "கோட்டை நோக்கிப் பேரணி".*


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தன்னிகரில்லாத் தனிச்சங்கப் போராட்டம் தான் "கோட்டை நோக்கிப் பேரணி". தற்போது வரை மாநிலம் முழுவதுமிருந்து வந்து கொண்டிருக்கும் களநிலவரப்படி பத்தாயிரம் ஆசிரியர்களைத் தாண்டி நிச்சயம் பேரணியில் பங்கேற்பது உறுதியாகி விட்டது.*


 *ஏற்கனவே 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 03.02.2017ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சென்னையில் நடத்திய DPI முற்றுகைப் போரில் மாநிலம் முழுவதுமிருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆவேசத்தின் வார்ப்படங்களாய் பங்கேற்றனர். "கொரில்லாப் போர்" என்று ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட அந்தப் போராட்டம் இயக்க வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த போராட்டம்.*


*அதேபோன்று 26.09.2018ல் சென்னை அண்ணா கலையரங்கில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய "இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்ட ஆயத்த மாநாடு" வங்கக் கடலோடு போட்டி போட்ட மாநாடு.அந்த மாநாட்டிலும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


இன்றைய தமிழ்நாட்டின் நிதியமைச்சர் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் அம்மாநாட்டில் பங்கேற்று மாநாட்டுக் கூட்டத்தை வியந்து பாராட்டிய நிகழ்வு எப்போதும் மறக்க முடியாதது.இப்படிச் சாதனை படைத்த பல்வேறு களநிகழ்வுகளை இயக்கம் தோன்றிய நாள் முதல் நடத்திய வலிமை மிக்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நாளை (29.09.2023) நடைபெறும் "கோட்டை நோக்கிப் பேரணி" நிச்சயம் வரலாற்றில் இடம்பெறும் என்பது உறுதியாகிவிட்டது. அதன் மூலம் தமிழ்நாட்டு ஆசிரியர்களின் உணர்வுகள் கோட்டைக் கதவுகளை  நிச்சயம் தட்டும் என்ற புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது.*


*நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளை இது. களத்தைச் சூடாக்குவதில் முனைப்புக் காட்ட வேண்டிய நேரம் இது. களச்சூழல் நமக்குச் சாதகமாக இருக்கும் சூழலில் புறச்சூழலையும் பயன்படுத்தி நேர்கொண்ட பாதையில் லட்சியப்பதாகையோடு களம் நோக்கிப் பயணிப்போம்.நம் கவனத்தைச் சிதறடிக்கும் எந்தவொரு அற்ப நிகழ்வையும் பொருட்படுத்தாமல் களம்நோக்கி முன்னேறுவோம்!

என்று கூறினார்.



சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது:




ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. போராடினால் கூட முறையான பதில் இல்லை. அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 70 ஆயிரம் கோடியை தவறான முறையில் கையாண்டு வருகின்றனர்.


தேனியில் வருவாய் துறை ஊழியர் ஒருவர் மூளைச்சாவு காரணமாக இறந்தார். அவருக்கான பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. அரசின் செயல்பாடு இதே நிலையில் இருந்தால் இதன் முடிவு பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றார்.

TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459