ஆசிரியர்கள் தங்களது சொந்த பணத்திலிருந்து பள்ளிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் நிலை...!!! - ஆசிரியர் மலர்

Latest

28/09/2023

ஆசிரியர்கள் தங்களது சொந்த பணத்திலிருந்து பள்ளிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் நிலை...!!!

 தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு 10 மாதமாக சுகாதாரப் பணிகளுக்கு நிதி வழங்கவில்லை என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.


தமிழக பள்ளிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்காக நிரந்தரப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. தற்போது சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக பணியாளர்களை ஏற்பாடு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நியமனம் செய்யப்படும் பணியாளர்களின் ஊதியம் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு தேவையான மருந்து உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு என அனைத்திற்கும் சேர்த்து தொடக்கப்பள்ளிகளுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.1300 நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.2000 நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியும் முறையாக வழங்கப்படுவதில்லை. 10 மாதங்களுக்கும் மேலாக இந்த நிதி வழங்கப்படாமல் உள்ளது.

இதனை ஈடு செய்ய ஆசிரியர்கள் தங்களது சொந்த நிதியிலிருந்து சுகாதாரப் பணிகளை மேற்கொள்கின்றனர். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்ற பள்ளிகளில் அரசால் வழங்கப்படும் குறைந்த தொகையை வைத்து சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுச்செயலாளர் ரெங்கராஜன் கூறுகையில்,பள்ளிகளில் சுகாதாரப் பணிகளில் ஈடுபடும் தற்காலிக பணியாளர்கள் ஊதியம் மிக குறைவாக உள்ளது என்பதாலும், தற்காலிக பணியாளர்கள் என்பதாலும் நியமனம் செய்யபட்ட பணியாளர்களிடம் முழுமையாக பணிகளை பெற முடியவில்லை.

மாணவர்களின் சுகாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் இந்த பணியை மேற்கொள்கின்றனர். பள்ளிகளில் கழிப்பறையை சுத்தம் செய்ய நிரந்தர பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.

அதிகாரிகள் ஆய்வு செய்கின்றபோது கழிப்பறை சுகாதாரப் பணிகளில் குறைபாடு தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்ற நிலைகளை மேற்கொள்கின்றனர்.

பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய சுகாதாரப் பணிகளுக்கான நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459