போலிச்சான்று அளித்த, தகுதித் தேர்வு எழுதாத அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 4 பேர் பணிநீக்கம் - ஆசிரியர் மலர்

Latest

07/04/2023

போலிச்சான்று அளித்த, தகுதித் தேர்வு எழுதாத அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 4 பேர் பணிநீக்கம்

 971782

போலிச்சான்று தந்து பணிக்கு சேர்ந்தது, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாததால் ஏனாமில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் நான்கு பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


புதுவை மாநிலத்தில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. அதில் ஏனாம் பிராந்தியம் ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ளது. ஏனாம் பிராந்திய அரசு பணிகளில் ஆந்திர மாநில பல்கலைக்கழக கல்லூரியில் படித்தவர்கள் உள்ளனர். அரசுத் துறை பணிகளில் உள்ளவர்கள் போலியாக பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்திருப்பதாக புகார்கள் வந்துள்ளது. இதுதொடர்பாக அவ்வப்போது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், ஏனாம் அரசுப் பள்ளியில் பணியாற்றிய சமூக அறிவியல் ஆசிரியர் முகமதுயாகூப் போலி பிஎட் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இவர் 2000-ல் பிஎட் படித்ததாக சான்றிழ் அளித்துள்ளார். ஆனால், அவர் படித்த கல்லூரியில் 2003-ல் தான் பிஎட் படிப்பு தொடங்கியது எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து ஏனாம் கல்வித் துறை அவர் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்துள்ளது.


இதனிடையே ஏனாம் தொடக்கப் பள்ளியில் 2013 முதல் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் தனலட்சுமி, வெங்கடலட்சுமி, சந்தோஷி ஆகியோர் வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்காததால் நீதிமன்ற உத்தரவின்படி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.


புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் பலர் முறைகேடாக பணிக்கு சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளதையடுத்து அனைத்து ஆசிரியர்களின் சான்றிதழும் சரிபார்க்கும் பணி துவங்கியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459