ஆங்கில கலப்பின்றி அனைவரும் தமிழில் பேச வேண்டும் : உயர் நீதிமன்ற நீதிபதி - ஆசிரியர் மலர்

Latest

14/07/2022

ஆங்கில கலப்பின்றி அனைவரும் தமிழில் பேச வேண்டும் : உயர் நீதிமன்ற நீதிபதி

 சென்னை: ஆங்கில கலப்பின்றி அனைவரும் தமிழில் பேச வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்தார். 


 ‘புதுகைத் தென்றல்’ இதழுக்கான பாராட்டு விழா, அதன் ஆசிரியர் புதுகைமு.தருமராசனின் 80-ம் வயது தொடக்க விழா, கவிதை நூல் வெளியீடு ஆகிய 3 விழாக்கள் ஒருசேர, சென்னையில் நேற்று நடந்தது. இந்நிகழ்வில், உயர் நீதிமன்ற நீதிபதிஆர்.சுரேஷ்குமார், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: இன்றளவில் தொழில்நுட்பம் பெருகினாலும் ‘புதுகைத் தென்றல்’ போன்ற சிற்றிதழ்கள் ஆற்றுகின்ற தமிழ் வளர்ச்சிப் பணிகள் பாராட்டத்தக்கவை. அதன் ஆசிரியருக்கு எனது வாழ்த்துகள். தமிழகத்தில் பள்ளி இறுதித் தேர்வு தமிழ் பாடத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறாதது கவலையளிக்கிறது. இந்த நிலை மாற அனைவரும் ஆங்கிலம் கலப்பின்றி தமிழில் பேசுவதுஅவசியம். வருங்கால சந்ததியினருக்குத் தமிழில் பேச, எழுத சொல்லித் தருவது நமது கடமை. இவ்வாறு அவர் பேசினார். அதைத் தொடர்ந்து தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி பேசும்போது, “வரும் ஆக.12, 13, 14-ம் தேதிகளில் மயிலாப்பூரில் நடைபெறும் கம்பன் விழாவுக்கு தமிழ் ஆர்வலர்கள் பெருந்திரளாக வரவேண்டும்” என கேட்டுக் கொண்டார். விழாவில், குழந்தை இலக்கியப் பேரவை தலைவர் பி.வெங்கடராமன், கவிஞர்கள் கார்முகிலோன், விஜயகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கவிஞர்கள் ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், மலர்மகன், புதுகை வெற்றிவேலன், சென்னை கம்பன் கழகச் செயலாளர் இலக்கிய வீதிஇனியவன், வழக்கறிஞர் பாலசீனிவாசன், ஒய்எம்சிஏ பட்டிமன்ற செயலர் தாமரைக்கண்ணன், இணைச் செயலர் கிருட்டிணமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459