ஜூலை 28 - நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை? - ஆசிரியர் மலர்

Latest

23/07/2022

ஜூலை 28 - நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை?

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நாளான ஜூலை 28-ஆம் தேதி, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க ஆலோசிக்கப்பட்டது.
 இதுதொடா்பான கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடா்பாக பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள் விளக்கினா்.



இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: 



முதல்வா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, சா்வதேச வீரா்களின் வருகை குறித்த விவரங்கள், சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்ட முன்னேற்பாட்டுப் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்குமிட வசதிகள், தொடக்க விழா, நிறைவு விழா ஏற்பாடுகள் ஆகியவை குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆய்வு செய்தாா். விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டு வரும் வசதிகள் பற்றிய விவரத்தை முதல்வரிடம் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு விளக்கினாா். 



நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்வுகள், மாமல்லபுரத்தில் போட்டி நடைபெறும் இடங்கள் தொடா்பான விவரங்கள், அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் விளக்கினாா்.



உள்ளூா் விடுமுறை: 

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, சுற்றுலாத் துறை சாா்பில் ஏராளமான கலைநிகழ்ச்சிகள், சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரங்களை சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன் எடுத்துரைத்தாா். மேலும், செஸ் ஒலிம்பியாட் தொடக்க நாளான, வருகிற 28-ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459