கல்வி ஆண்டின் முதல் பயிற்சி ஒரு நேர்மறையான பின்னூட்டம் - ஆசிரியர் மலர்

Latest

19/06/2022

கல்வி ஆண்டின் முதல் பயிற்சி ஒரு நேர்மறையான பின்னூட்டம்

கல்வி ஆண்டின் முதல் பயிற்சி ஒரு நேர்மறையான பின்னூட்டம்


ஒரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில், ஆசிரியர்களுக்கான முதல் பயிற்சிக் கூட்டம் , இணையவழியில் பயிற்சி எனத் தொடங்கி, முதல் ஒருமணி நேரம் ஆசிரியர்கள் தங்களது வருகையைப் பதிவிடுவதற்குக் கூட போராட வேண்டியிருந்தது.

அடுத்து , காணொலி மட்டுமே ஓடிக்கொண்டிருக்கின்றது.

கலந்துரையாடவோ, உரையாடவோ எந்தவொரு வாய்ப்பும் அற்ற வகையில் முதல் பயிற்சிக்கூட்டம் இருப்பதென்பது,

இன்னும் கல்வியைப் பற்றி, கற்பித்தல் உத்தி பற்றி, ஆசிரியர்களின் மனநிலை பற்றி அதிகாரிகள் உணரவில்லை என்பதைக் காட்டுகிறது..



இதனைக் காணொலிகளாக அல்லது YouTube வடிவில் link-குகளாக வழங்கியிருக்க முடியும்.



தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஆசிரியர்களை ஆங்காங்கே ஒருங்கிணைத்து

பயிற்சி என்னும் பெயரில் முதல் கூட்டத்திலேயே சோர்வடையச் செய்திருக்கிறது இந்தப் பயிற்சி.



இது இப்படியே தொடர்ந்து கொண்டிருக்குமானால், கல்வி என்பது எந்திரத்தனமாகப் போய்விடும்.

தொழில்நுட்பத்தை முதன்மைப்படுத்தினால் ஆசிரியர்கள் மட்டுமல்ல, மாணவர்களும் தொலைந்தே போவார்கள்..



கல்வியை உயிர்ப்போடு வைத்திருக்க விரும்பினால், கைப்பேசிக்குள் கல்வியைத் திணிக்க முயற்சிக்காமல்,

மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வழியென்ன என்று ஆசிரியர்களிடம் பேசுங்கள்..

ஆசிரியர்களிடம் பேசாமலும், ஆசிரியர்கள் பேசாமலும் எதுவும் நடக்காது. எதுவும் நகராது..



உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த தகவல்களை பயிற்சி மையத்திற்கு நேரடியாக ஒரு மருத்துவரையோ,

அல்லது ஆளுமைத்திறன் பயிற்றுநரையோ கொண்டு கலந்துரையாடல் வடிவில் திட்டமிட்டிருக்க வேண்டும்.

ஒரு கல்வி ஆண்டின் தொடக்கப் பயிற்சி என்னும்பொழுது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு முழுமையான கல்வி ஆண்டை எதிர்கொள்ளப்போகிறோம்.



மாணவர்களிடம் என்ன முன்னேற்றத்தைக் காண வேண்டும்.?

அதனை அடைய என்ன சவால்கள் இருக்கிறது? ஆசிரியர்களது அணுகுமுறைகள் எப்படி இருக்க வேண்டும்? என்பது சார்ந்த நேரடியான உரையாடல்கள் இருக்கும் வகையில் அமைத்திருக்க வேண்டும்.



நாள் முழுவதும் காணொலியை மட்டுமே பார்த்துவிட்டுப் போவதை எப்படிப் பயிற்சி என எடுத்துக்கொள்வது?

காணொலி வாயிலாக வழங்கப்பட்ட தகவல் தேவையானதுதான். முக்கியமாதுதான். அதனை அனைவரது கைபேசிக்கும் அனுப்பிக் 

காணச் செய்திருக்கலாமே!

பங்கேற்பாளர்கள் பங்களிப்பே இல்லாமல் , பங்களிக்க வாய்ப்பும் இல்லாமல், ஒரு பயிற்சி எப்படி வெற்றி பெறும்?

EMIS ன் செயல்பாடுகளும், முக்கியத்துவமும்தான் இன்றைய பயிற்சியின் கருப்பொருள்கள்..

ஆனால் முதல் ஒரு மணிநேரம் Attendance காகப் போராடிய ஆசிரியர்கள் கடைசி ஒருமணிநேரம் Assessment உடன் போராடித் தோற்றுபோனார்கள் என்பதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.



ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் ஓர் இயங்குதளத்தை இணையவழியில் பயன்படுத்தப் போகிறார்கள் என்னும்பொழுது,

அதனது செயல்வேகத்தை அதிகப்படுத்தவும், தடையறாமல் இயங்கவும் செய்ய முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும்.



குறைகளைச் சுட்டிக்காட்டும்போது,

குற்றச்சாட்டாகக் கருதாமல், அதற்கான 

தீர்வுகளை நோக்கிப் பயணிக்க வேண்டுமென்பதே ஆசிரியர்களது விருப்பம்.....

!ஆசிரியர்கள் கருத்து....

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459