முன்னுரிமை பாடத்திட்டம் வெளியீடு பொது தேர்வு மாணவர்கள் குழப்பம் - ஆசிரியர் மலர்

Latest

28/04/2022

முன்னுரிமை பாடத்திட்டம் வெளியீடு பொது தேர்வு மாணவர்கள் குழப்பம்

தேர்வுக்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், புதிதாக முன்னுரிமை பாடத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. 


இதனால், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், மீண்டும் குழப்பம் அடைந்துஉள்ளனர்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அடுத்த வாரம் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இதற்கான செய்முறை தேர்வுகள், 25ம் தேதி துவங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில், பொதுத் தேர்வுக்கான பாடத் திட்டம் குறித்து, பள்ளிக் கல்வி ஆணையரகம் நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன் விபரம்:நடப்புக் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள், மே மாதம் நடக்க உள்ளன. இந்த தேர்வுக்கான வினாக்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத் திட்டத்தில் இருந்து முழுமையாக கேட்கப்படும். இப்பாடத் திட்டம், அரசு தேர்வுகள் இயக்குனரகத்தின், www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பில், முன்னுரிமை பாடத் திட்டம் இணையதளத்தில் உள்ளதாக, பள்ளிக் கல்வி துறை கூறியுள்ளது. பொது தேர்வு நெருங்கி விட்ட நிலையில், தற்போது முன்னுரிமை பாடத்திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது. 



இந்த பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை, எப்போது நடத்த போகின்றனர் என்ற, கேள்வி எழுந்துள்ளது.ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டம் ஒன்று வெளியிடப்பட்டது. பின்னர், 'நடத்தாத பாடத்தில் இருந்து பொது தேர்வில், கேள்விகள் இடம் பெறாது' என, பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவித்தார்.அதன்பின், அரசு தேர்வுத் துறை ஒரு பாடத்திட்ட அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒரு பாடத் திட்டத்தை வெளியிட்டது.



தற்போது, பள்ளிக் கல்வி கமிஷனரகம், முன்னுரிமை பாடத் திட்டம் என்ற பெயரில் இதை வெளியிட்டுள்ளது.இந்த குளறுபடிகள் இத்துடன் நிற்குமா அல்லது பொது தேர்வு வரை தொடருமா என, மாணவர்களும், ஆசிரியர்களும் சந்தேகத்தில் இருக்கின்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459