அரசு பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழக்கு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

16/09/2021

அரசு பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழக்கு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முந்தைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் உள்ள பிரச்னைகளை மட்டும் பட்டியலிட்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக மண்டல் கமிஷன், எம். நாகராஜ், ஜர்னயில் சிங் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளில் உச்ச நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பளித்துள்ளது.


குறிப்பாக, நாகராஜ் வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2006ல் தீர்ப்பு அளித்தது. அதில், ‘ஒரு பிரிவினர் பின்தங்கி இருக்கின்றனர் என்பதற்கான புள்ளி விவர ஆதாரங்கள் மற்றும் பிரதிநிதித்துவத்தில் பின்தங்கி இருப்பதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட வேண்டும்,’ என்று கூறப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2018ல் வழங்கிய மற்றொரு தீர்ப்பில், ‘ஒரு பிரிவினர் பின் தங்கி இருக்கின்றனர் என்பதற்கான தகவல்களை திரட்டத் தேவையில்லை,’ என கூறப்பட்டுள்ளது. இந்த மாறுபட்ட தீர்ப்பு குழப்பத்தை ஏற்படுத்தியது.



இந்நிலையில், பதவி உயர்வில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் உள்ள தடைகளை நீக்கக் கோரி பல்வேறு மாநிலங்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர். கவாய் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பிறபித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான முந்தைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க முடியாது. ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புகளின் அடிப்படையில், பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.


அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளையோ, உத்தரவுகளையோ பிறப்பிக்க முடியாது. அதனால், பதவி உயர்வு வழங்குவதில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் பின் தங்கியுள்ளனரா என்பதற்கான புள்ளி விபரங்களின் அடிப்படையில் செய்வதா அல்லது பதவிகளில் உரிய பிரதிநிதித்துவம் உள்ளதா என்ற அடிப்படையில் செய்வதா என்பது குறித்துமாநில அரசுகளே முடிவு செய்யலாம். அதில், ஏதேனும் தடைகளோ அல்லது இடயூறோ இருக்கும் பட்சத்தில் நீதிமன்றம் அதனை விசாரிக்கும்.

மேலும், இது தொடர்பான தகவல்களை அளிக்கும்படி மாநில அரசுகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தங்களுக்கு உள்ள பிரச்னைகள் தொடர்பாக மாநில அரசுகள் ஒரு அறிக்கையாக இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதில் குறிப்பிடும் பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். பின்னர், விசாரணையை அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459