பள்ளி மாணவர்களுக்கு தொடர் காய்ச்சல் - கொரோனா பரவல் அச்சத்தில் பெற்றோர்கள் - ஆசிரியர் மலர்

Latest

17/09/2021

பள்ளி மாணவர்களுக்கு தொடர் காய்ச்சல் - கொரோனா பரவல் அச்சத்தில் பெற்றோர்கள்

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வரும் 50 பேருக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் கொரோனாவாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதே போல மதுரை, கள்ளக்குறிச்சியில் மாணவர்களுக்கு கொரோனா பரவி வருவதால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் கடந்த 1ஆம் தேதி திறக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்தல், முககவசம் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்பட்டு பல லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மாறாந்தையில் இயங்கி வரும் அரசு மேல்நிலை பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 450 மாணவர்கள் பயில்வதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கொரோனா தொற்று குறைவை அடுத்து தமிழக அரசு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளியினை திறக்க அனுமதி அழித்திருந்தது. அதன்படி பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் சுழற்சிமுறையில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் மாறாந்தை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 22 பேருக்கு நேற்று ஒரே நாளில் காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த சுகாதாரத் துறையினர் நேரில் சென்று மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டனர். பரிசோதனையின் முடிவு இன்னும் வராத நிலையில் இன்று மேலும் 30 மாணவர்களுக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. அடுத்தடுத்து மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருவதால், ஒரு வேலை கொரோனா தொற்றாக இருக்கலாமோ என்ற அச்சம் மற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே நிலவியுள்ளது.இதே போல கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததை ஆசிரியர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து 20 மாணவர்களுக்கு சுகாதாரத்துறையினர் மூலம் பள்ளிக்கூடத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர் இதில் 4 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என 30 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய பள்ளி நிர்வாகத்துக்கு சுகாதாரத்துறையினர் அறிவுரை வழங்கினர். இதே போல மதுரையைச் சேர்ந்த மாணவ,மாணவியர் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை, மதுரையில் இதுவரை இரு தனியார் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவரது தந்தைக்கு கொரோனா தொற்று இருந்ததால் மாணவிக்கும் வந்துள்ளது. இருவரின் பள்ளிகளிலும் மாணவ, மாணவியருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு 17 நாட்கள் ஆன நிலையில் இதுவரை 150க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். குழந்தைகளை பள்ளிக்கு வர வற்புறுத்த வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார். உயர்நீதிமன்ற மதுரைக்கிளையும் மாணவர்களை பள்ளிக்கு வர வற்புறுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வந்தது. இதனையடுத்தே 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடத்தப்பட்டு அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டுள்ளது.வரும் 30ஆம் தேதி மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்திய பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.. 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459