*பச்சரிசியா? புழுங்கல் அரிசியா? ஆரோக்கியத்திற்கு எது நல்லது?* - ஆசிரியர் மலர்

Latest

12/09/2021

*பச்சரிசியா? புழுங்கல் அரிசியா? ஆரோக்கியத்திற்கு எது நல்லது?*


மூன்று வேளை உணவில் ஒரு வேளை உணவாவது அரிசி சோறு இடம் பெற வேண்டும் என்று கட்டாய விதி போல் கடைப் பிடிக்கிறோம். கைக்குத்தல் அரிசி, சிகப்பரிசி, கவுனி அரிசி, வரகரிசி, சம்பா அரிசி, மாப்பிள்ளை சம்பா, குதிரை வாலி, சீரக சம்பா, கிச்சடி சம்பா, காட்டு யானம் இப்படி ரக ரகமான அரிசிகளை சாப்பிட்டு கட்டுக்கோப்பாக உடலை பராமரித்தவர்கள் நம் முன்னோர்கள். பாரம்பரிய அரிசி வகைகளுக்கான முக்கியத்துவத்தை மக்கள் உணர தொடங்கியிருக்கிறார்கள். அதே நேரம் அரிசி என்றாலே பச்சரிசி அல்லது புழுங்கலரிசிதான் எல்லோரும் சொல்வார்கள்.


நீரிழிவு நோயாளிகள் பச்சரிசியை எடுத்துக்கொள்ளவே கூடாது என்கிறார்கள் நீரிழிவு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்.



காரணம் ஊட்டச்சத்து துறையில் வெண்மை விஷங்கள் என்று பட்டியலிட்டிருக்கும் உணவுப்பொருளில் அரிசி மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இதை முற்றிலும் தவிர்க்க முடியாது என்றாலும் அளவாக பயன்படுத்துங்கள் என்கிறார்கள்.


நீரிழிவி நோயாளிகள் பச்சரிசி உணவை அதிகம் எடுத்துக்கொள்ளும் போது இரத்தத்தில் அதிக ஆற்றல் சேர்கிறது. இன்சுலின் அளவு குறைவாக சுரப்பதால் இரத்தத்தில் அதிகப்படியான ஆற்றல் சேமிக்கப்படுகிறது. அதனால் தான் நீரிழிவு நோயாளிகள் பொதுவாக அரிசி உணவை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதிலும் பச்சரிசியை எடுக்கவே கூடாது என்பதும் இதற்காகத் தான்.


புழுங்கலரிசி கொஞ்சம் கடினமாக சுவைகொஞ்சம் குறைந்து காணப்படும் என்பது பச்சரிசி பிரியர்களின் எண்ணம். ஆனால் புழுங்கலரிசியில் தான் உடலுக்கு தேவையான சத்துக்கள் வீணாகாமல் பாதுகாக்கப்படுகிறது. புழுங்கலரிசியை அப்படியே வேக வைக்கும்போது நெல்லின் தோலுக்கு அடியில் உள்ள வைட்டமின் சத்துகள், நார்ச்சத்துகள் அப்படியே பாதுகாக்கப்படுகிறது. ஆனால் பச்சரிசியில் உமியெடுக்கும் போது இந்தச் சத்துக்கள் அழிந்துவிடுகிறது.


புழுங்கலரிசியை வேகவைப்பதால் நான்கு வருடங்கள் ஆனாலும் அவை குணமாறுவதில்லை. புழுங்கலரிசி வேகுவதற்கு சிறிது நேரம் அதிகரிக்கும். உணவின் சுவையை உணரவும் அதிகரிக்கவும் செய்யக்கூடியது புழுங்கலரிசி தான். இந்திய அளவில் தமிழக பொன்னிக்கு அதிக வரவேற்பு உண்டு. ஆனாலும் குழம்போடு ஒட்டாத பச்சரியைத்தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள்.


பச்சரி நீளமாக இருப்பதோடு விரைந்து வேகக்கூடியது. இடியாப்பம், கொழுக்கட்டை, முறுக்கு மாவுகளைத் தயாரிக்கவே முன்னோர்கள் பச்சரியை பயன்படுத்தினார்கள். அவர்களது வழியில் பச்சரியை அதிகம் பயன்படுத்தாமல் புழுங்கல் அரிசியை பயன்படுத்துவதே நல்லது. அதைவிட சிறப்பு புழுங்கலரிசியை குக்கரில் வைக்காமல் வடித்து சாதமாக்கி சாப்பிடுவது.


தற்போது நேஷனல் நியூட்ரிஷியன் இன்ஸ்ட்டியூட் ஆய்வு ஒன்று அரிசியில் உள்ள வைட்டமின் பி, இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு சத்துகள் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது. இயற்கையான உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் நெல்களில் தான் சத்துக்களும் முழுமையாக இருக்கும் என்கிறார்கள்.


இயன்றவரை பாரம்பரிய அரிசியைப் பயன்படுத்துங்கள். நீரிழிவு நோயாளிகள் தவிடு நீக்காத அரிசியைப் பயன்படுத்துவது நல்லது. இயலாதவர்கள் புழுங்கலரிசியைப் பயன்படுத்தலாம். தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே பச்சரியைப் பயன்படுத்தலாம். எனினும் அளவோடு அரிசி உணவை எடுத்துக் கொள்வதே நிரந்தர ஆரோக்யத்துக்கு வழி செய்யும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459