தமிழக அரசுக்கு ஜாக்டோ ஜியோ வைத்துள்ள 14 கோரிக்கைகள்! - ஆசிரியர் மலர்

Latest

12/08/2021

தமிழக அரசுக்கு ஜாக்டோ ஜியோ வைத்துள்ள 14 கோரிக்கைகள்!

 


IMG_20210811_140421

ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகள் :

* 1.4.2003 க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு , பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.

* இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காக கடந்த செப்டம்பர் 2017 , ஜனவரி 2019 ஆகிய காலங்களில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்திய வேலைநிறுத்தப் போராட்ட காலங்களை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக , முந்தைய ஆட்சியாளர்களால் பழிவாங்கும் நடவடிக்கையாக பணிமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களை மீண்டும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய பணியிடத்திலேயே பணியமர்த்திட வேண்டும்.

* கடந்த ஜாக்டோ - ஜியோ போராட்டக் காலத்தில் , ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்கள் மீது காவல் துறையால் புனையப்பட்ட பொய் வழக்குகள் இதுநாள்வரை இரத்து செய்யப்படாததால் , விருப்ப ஓய்வு மற்றும் பதவி உயர்வு பெறுவதற்கு மிகப் பெரும் தடையாக உள்ளது. காவல் துறையால் புனையப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக இரத்து செய்திட வேண்டும். 

* கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் கடந்த அதிமுக அரசு மூன்று தவணை அகவிலைப்படியினை முடக்கியது. தற்போது ஒன்றிய அரசு அதன் ஊழியர்களுக்கு ஜூலை 2021 முதல் 11 விழுக்காடு அகவிலைப்படியினை அறிவித்துள்ளது. ஒன்றிய அரசு வழங்கியுள்ள அகவிலைப்படியினை தமிழக அரசு உடனடியாக ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு வழங்கிட வேண்டும்.

*  கொரோனா நோய்த் தொற்றினைக் காரணம் காட்டி , சரண் விடுப்பினையும் கடந்த ஆட்சியாளர்கள் இரத்து செய்துள்ளனர். சரண் விடுப்புச் சலுகையினையும் உடனடியாக வழங்க வேண்டும். 

* இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டுவரும் அநீதி களையப்பட வேண்டும்.

* முதுநிலை ஆசிரியர்கள் , அனைத்து ஆசிரியர்கள் , அரசுப் பணியாளர்கள் , கண்காணிப்பாளர்கள் , தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் , களப் பணியாளர்கள் , பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் , ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். 

* கல்லூரிப் பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு ( CAS ) உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும்.

* சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு , அங்கன்வாடி , வருவாய் கிராம உதவியாளர்கள் , ஊராட்சி செயலாளர்கள் , ஊர்ப்புற நுாலகர்கள் , MRB செவிலியர்கள் , கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் , தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள் , செவிலியர்கள் , பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.

* 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.

*  2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள்முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.

* அரசாணை எண் 56 ல் இளைஞர்களின் வேலைவாய்ப்பினைப் பறிக்கின்ற வகையில் பகுப்பாய்வு குழு அமைக்கப்பட்டு , அக்குழு அரசிடம் அளித்த அறிக்கையினை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். மேலும் பள்ளிக்கல்வித் துறையால் வெளியிடப்பட்டுள்ள அரசாணைகள் 100 மற்றும் 101 ஐ இரத்து செய்திட வேண்டும். 

* 5000 அரசுப் பள்ளிகள் மூடப்படுவதை உடனடியாகக் கைவிட்டு , சமூக நீதியினைப் பாதுகாத்திட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* 3500 அரசு தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும் 3500 சத்துணவு மையங்களை மூடுவதையும் முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.

* அங்கன்வாடி மையங்களில் LKG / UKG வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை இரத்து செய்ய வேண்டும்.

* பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக பணியேற்கும் அலுவலர் அரசுப் பணியில் ஆசிரியர் / மாவட்டக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர் / இணை இயக்குநர் ஆகிய நிலைகளில் பணியாற்றி , கல்வித் துறையில் அனுபவ முதிர்ச்சி பெற்றதன் அடிப்படையில் இயக்குநராக நியமிக்கும் நடைமுறையானது கடந்த 150 ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு , இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே , இதனை மாற்றி மீண்டும் பணிமூப்பு - கல்வித் துறையில் பெற்ற கள அனுபவ அடிப்படையின் வரும் அலுவலரையே பள்ளிக்கல்வி இயக்குநராக பணியமர்த்த வேண்டும்.


Jactto geo Letter to CM - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459