அதிர்ச்சி...இலவச சைக்கிள்கள் வழங்குவதில் சாதிகளை குறிப்பிட்டு மாணவிகளை பிரித்த சம்பவம்... - ஆசிரியர் மலர்

Latest

03/02/2021

அதிர்ச்சி...இலவச சைக்கிள்கள் வழங்குவதில் சாதிகளை குறிப்பிட்டு மாணவிகளை பிரித்த சம்பவம்...

 மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் செயல்பட்டு வரும் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்குவதில் சாதிகளை குறிப்பிட்டு மாணவிகளை பிரித்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

இளஞ்சிவப்பு அட்டையில் எம்.பி.சி. என எழுதி சைக்கிளின் கூடையில் வைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

செம்பனார்கோவில்:

செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர்.

நடப்பு கல்வியாண்டில் மேல்நிலை வகுப்பு மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகளை சாதி ரீதியில் பிரித்து பார்க்கும் நோக்கில் தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்கு நீல நிறத்திலான அட்டையில் மாணவியின் பெயர், வரிசை எண் மற்றும் எஸ்.சி என்றும் அதேப்போன்று மஞ்சள் அட்டையில் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு பி.சி என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு இளஞ்சிகப்பிலான அட்டையில் எம்.பி.சி என்றும் எழுதி சைக்கிளின் முன்புற புத்தக கூடையில் ஒட்டி வைத்திருந்தனர்.

பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை மாணவிகளிடையே மிகுந்த மன உளைச்சலையும், கூச்சமான உணர்வையும் ஏற்படுத்தி இருப்பதாக பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.

இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள இந்திய மாணவர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு இதுப்போன்ற தீண்டாமை கொடுமைகளின் நவீன வடிவங்கள் கல்வி நிலையங்களில் அரங்கேறி வருவது தொடர்கதையாகி வருகிறது.

கல்வி கற்க செல்லும் மாணவர்களிடையே நஞ்சை விதைக்கும் செயலில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கையை கல்வித்துறை உடனடியாக எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டங்களை நடத்துவோம் என கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459