CEO அலுவலகத்தில் தீ விபத்து .... முக்கிய ஆவணங்கள் .....? - ஆசிரியர் மலர்

Latest

21/01/2021

CEO அலுவலகத்தில் தீ விபத்து .... முக்கிய ஆவணங்கள் .....?

 ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் ஆவணங்கள், கணினிகள் உள்ளிட்ட எரிந்து சேதமாகின.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக பழைய கட்டிடத்தின் கீழ்தளத்தில் முதன்மைக் கல்வி அலுவலகம் செயல்படுகிறது. இங்கு இரவுக் காவலலாளியாக உள்ள கே.கே.நகரைச் சேர்ந்த பழனி (57) என்பவர் நேற்று இரவு உறங்கியுள்ளார்.அப்போது நள்ளிரவு 12.30 மணியளவில் அலுவலகத்தின் கடைசிப்பகுதியில் முக்கிய ஆவணங்கள், கணினிகள் உள்ள பகுதிகளில் தீப்பற்றி அலுவலகம் முழுவதும் புகைமண்டலமாகியுள்ளது. தூக்கம் கலைந்த காவலாளி பழனி, அருகிலிருந்த தீயணைப்பு நிலையத்திற்கு ஓடிச்சென்று தகவல் கூறியுள்ளார். அதனையடுத்து தீயணைப்புத்துறையினர் சென்று ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தண்ணீரை அடித்து தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் மரத்தாலான பீரோக்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. அதில் முக்கிய ஆவணங்கள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் அருகே மூட்டைகளாகக் கட்டியிருந்த பழைய, புதிய ஆவணங்களும் எரிந்துவிட்டன.

மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான 10-க்கும் மேற்பட்ட கணினிகள், பிரிண்டர்கள், ஜெராக்ஸ் இயந்திரம், மின்விசிறிகள் எரிந்து சேதமடைந்தன.

கல்வி அலுவலக அறையில் பற்றிய தீயானது அருகேயுள்ள உள்ளாட்சி தணிக்கைத்துறை அலுவலகத்திலும் பரவியதால் அங்கிருந்த கணினிகள், பிரிண்டர்கள் உள்ளிட்ட மின்சாதனங்களும் சேதமடைந்தன.

இதனால் முதன்மைக் கல்வி அலுவலகம், உள்ளாட்சித் தணிக்கைத்துறை அலுவலகம் ஆகியவற்றி நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து கல்வித்துறையினரிடம் கேட்டபோது, பற்றியதில் ஆசிரியர்களின்பணி சேவைக்கால ஆவணங்கள், பணி உயர்வுக்கான ஆவணங்கள் மற்றும் வழக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எரிந்திருக்கலாம் என்றனர்.

தீயணைப்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் கூறும்போது, “மின்கசிவால் விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அப்படி ஏற்பட்டிருந்தால் மின்சார சர்க்யூட் உடனடியாக அணைந்திருக்கும். அதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீப்பற்றி எரிந்ததாலேயே மின்சாதனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன” என்று தெரிவித்தனர்.

தீ விபத்து குறித்து முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459