என்ஜினீயரிங் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் - ஆசிரியர் மலர்

Latest

10/12/2020

என்ஜினீயரிங் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும்

 


சென்னை, 

உயர்கல்வியில் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு நவம்பர், டிசம்பர் 2020-க்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்த அரசு அனுமதித்து இருக்கிறது. அதன்படி, இளநிலை, முதுநிலை என்ஜினீயரிங் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஆன்லைன் வாயிலாக வருகிற 17-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தேர்வுகள் நடைபெறும் கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* ஆன்லைன் செய்முறை தேர்வுக்கு பொருத்தமான தளங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதாவது, திறந்த மூலதளம், விஞ்ஞான மென்பொருள் தொகுப்புகள், மாடலிங் கருவிகள், வடிவமைப்பு மென்பொருள், விரிவான மதிப்பீட்டுமுறை ஆகியவற்றை பயன்படுத்தி ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும்.
* ஆய்வக பாடத்திட்டத்தின் அடிப்படையில் புற மதிப்பீடு வினாக்கள் கேட்கப்படும். கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட திறந்த மூலதளத்தை பயன்படுத்தி சோதனை நடத்தப்படலாம்.
* தேர்வுகள் நடத்துவதற்கு பல்கலைக்கழகத்தின் வழக்கமான மற்றும் பொருத்தமான நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
* செய்முறை தேர்வுகளின் வினாக்களுக்கு பதில் அளிக்க ‘ஏ4’ தாள்களை பயன்படுத்த வேண்டும். இந்த தேர்வு 3 மணி நேரத்துக்கு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
* தேர்வு எழுதி முடித்த பிறகு அதன் நகலை சம்பந்தப்பட்ட தேர்வு நடத்துபவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதை அவர்கள் பார்த்து மதிப்பீடு செய்வார்கள்.
* தேர்வை நடத்துபவர்கள் அந்த நகலை மண்டல அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதை மண்டல அலுவலகம் கல்லூரிவாரியாகவும், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் என பிரித்துவைத்து சி.டி.யில் பதிவுசெய்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும்.
* செய்முறை தேர்வு நடைபெறும் நேரத்தில் பறக்கும்படை உறுப்பினர்கள் ஆன்லைனில் நுழைவதற்கு அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட 17 வகையான வழிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459