இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வில் 97% பேர் தோல்வி - ஆசிரியர் மலர்

Latest

18/12/2020

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வில் 97% பேர் தோல்வி

 


சென்னை, 

கொரோனா நோய்த் தொற்று காரணமாக கல்லூரிகளில் நடத்தப்பட இருந்த செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. இறுதி செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் வழங்கி அறிவிக்கப்பட்டது. பின்னர் இறுதி செமஸ்டர் தேர்வு எழுத இருந்த மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டு, அதற்கான தேர்வு முடிவும் வெளியிடப்பட்டது.இந்த நிலையில் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய தேர்வு என்று கூறப்படும், இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு கொரோனாவுக்கு மத்தியில் நேரடியாக நடத்தப்பட்டது. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் 21-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 7-ந்தேதி வரை இந்த தேர்வு நடந்தது.
இதற்கு தேர்வர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தேர்வு எழுதுவதற்கு முன்பாக மாணவ-மாணவிகள் பலர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். கொரோனா காலத்தில் நேரடியாக அழைத்து தேர்வை நடத்துவதா? ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்றெல்லாம் அப்போது கூறினர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வுத்துறை அதிகாரிகளையும் நேரடியாக சென்று சந்தித்து அவர்கள் முறையிட்டனர். இருப்பினும் தேர்வுத்துறை தங்கள் முடிவில் உறுதியாக இருந்ததால், தேர்வர்கள் தங்களுடைய தேர்வை நேரடியாக எழுதி முடித்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் பேர் வரை இந்த தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது.
அவர்களுக்கான தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இதில் தேர்வு எழுதியவர்களில் 2.5 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று இருப்பதாகவும், மீதமுள்ள 97.5 சதவீதம் பேர் தோல்வியை சந்தித்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இது மாணவர்களுக்கும் கடும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.
கொரோனா காலத்தில் கல்லூரி உள்பட பள்ளி தேர்வுகள் அனைத்தும் நடத்தப்படாமல் தேர்ச்சி அறிவிக்கப்பட்ட நிலையில், இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு மட்டும் எந்த கருணையும் காட்டாமல் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு இருப்பதாக தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459