ஜனவரியில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு .. அரசு பள்ளிகளில் 5லடசம் மாணவர்கள் அதிகரிப்பு - ஆசிரியர் மலர்

Latest

12/12/2020

ஜனவரியில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு .. அரசு பள்ளிகளில் 5லடசம் மாணவர்கள் அதிகரிப்பு

 


வேலூர்: அரசுப்பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்கள் அதிகரித்துள்ளதால், அதற்கேற்ப கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆசிரியர்கள் தேவை குறித்து தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பொன்னையா அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள், தொழிற் பயிற்சி நிலையங்கள், பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட நிலையில் பள்ளிகள் தவிர மற்ற கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. அதேபோல் 9ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரையிலான வகுப்புகளையாவது பள்ளிகளை திறந்து நடத்த வழிவகை செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

இதனால் வரும் ஜனவரி மாதம் முதல் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் அரசு கருத்துக்களை கேட்டறிந்தது. தொடர்ந்து அனைத்து நிலையிலும் இதுதொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது. இதனால் ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதற்கான அறிவிப்பு டிசம்பர் இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்படுத்திய பொருளாதார சிக்கல்களால் மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகளில் படித்து வந்த லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் அரசுப்பள்ளிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி அரசுப்பள்ளிகளில் மொத்தமாக 5 லட்சம் மாணவர்கள் அதிகரித்துள்ளதாகவும், பள்ளிகள் வரும் கல்வி ஆண்டு முறையாக இயங்கும்பட்சத்தில் இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

அதேபோல் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு, அரசு தேர்வுகளுக்கான டிஎன்பிஎஸ்சி பயிற்சி, நீட் தேர்வு பயிற்சி போன்ற காரணங்களுக்காக அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை உள்ளது என்பதையும், எந்தெந்த பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் உள்ளார்கள், அவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களையும் கேட்டுள்ளது. இப்பட்டியலை பெற்ற பின்னர் உபரி ஆசிரியர்கள் உடனடியாக தேவையுள்ள பள்ளிகளில் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459