மாணவர்களின் எடையில் 10% மட்டுமே புத்தகப் பையின் எடை; 2-ம் வகுப்பு வரை நோ வீட்டுப்பாடம்- மத்தியக் கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்கள் - ஆசிரியர் மலர்

Latest

09/12/2020

மாணவர்களின் எடையில் 10% மட்டுமே புத்தகப் பையின் எடை; 2-ம் வகுப்பு வரை நோ வீட்டுப்பாடம்- மத்தியக் கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்கள்


 2-ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதைத் தவிர்க்கலாம் என்றும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையான மாணவர்களின் புத்தகப் பையின் சுமை, அவர்களது எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என மத்தியக் கல்வித்துறை  அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அனைத்து மாநிலக் கல்வித்துறைச் செயலாளர்களுக்கும் பள்ளிப் புத்தகப் பை 2020 (School Bag Policy 2020) என்ற பெயரில் அறிவுறுத்தல்களோடு கூறிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.


அதில் கூறப்பட்டுள்ளதாவது:

'' * புதிய கல்விக் கொள்கையின்படி என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ, கேவிஎஸ், என்விஎஸ் ஆகியவை இணைந்து புத்தகப் பை தொடர்பாக ஆராய வல்லுநர் குழுவை அமைத்தன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள் வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.


* ஒவ்வொரு மாணவரும் 6 - 8 ஆம் வகுப்பில் வேடிக்கையான படிப்பைத்தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் உள்ளூர்த் தேவைகளுக்கு ஏற்ப கைவினைத் தொழில், தச்சு, மின்சார வேலை, உலோக வேலை, தோட்ட வேலை ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.

* ஆண்டுதோறும் 6 - 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்கள் புத்தகப் பை இல்லாத தினங்களைப் பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும்.

* அதேபோல புத்தகப் பையின் எடையைத் தொடர்ந்து, சீராகக் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகத்தின் எடையையும் அதன் மீது குறிப்பிட வேண்டும்.

* மழலையர் வகுப்பு மாணவர்களுக்குப் புத்தகப் பை கூடாது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையான மாணவர்களின் புத்தகப் பையின் சுமை, அவர்களது எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும்.

* தரமான மதிய உணவு மற்றும் நீர் ஆகியவற்றைப் பள்ளிகளிலேயே வழங்குவது குறித்துப் பரிசீலிக்கலாம்.


வீட்டுப்பாடம்

* இரண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் வழங்குவதைத் தவிர்க்கலாம்.

* 3- 5 ஆம் வகுப்பு வரையான மாணவர்களை, ஒரு வாரத்துக்கு அதிகபட்சம் 2 மணி நேரங்கள் வீட்டுப் பாடம் செய்ய அனுமதிக்கலாம்.

* 6- 8 ஆம் வகுப்பு வரை தினந்தோறும் ஒரு மணி நேரம் என்ற அளவில் ஒரு வாரத்துக்கு அதிகபட்சம் 5 அல்லது 6 மணி நேரங்கள் வீட்டுப் பாடம் செய்ய அனுமதிக்கலாம்.

* 9- 12 ஆம் வகுப்பு வரை தினந்தோறும் இரண்டு மணி நேரங்கள் என்ற அளவில் ஒரு வாரத்துக்கு அதிகபட்சம் 10 அல்லது 12 மணி நேரங்கள் வீட்டுப் பாடம் அளிக்கலாம்.

* ஆசிரியர்களும் பள்ளி முதல்வர்களும் இயந்திரத்தனமான வீட்டுப் பாடங்களை அளிக்காமல், படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாக வீட்டுப் பாடங்கள் கொடுக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்''.

இவ்வாறு மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459