இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் இன்று மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரு நாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற இருந்த எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெற இருந்த சி.ஏ. தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இளநிலை யோகா மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 27 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படிப்புகளில் சேர்வதற்காக சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான தரவரிசை பட்டியலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று நிவர் புயல் கரையை கடந்தாலும், புயலுக்கு பின்னர் மழையின் தாக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், வரும் 27 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெற இருந்த இளநிலை யோகா மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை மாணவர்கள் சுகாதாரத்துறை இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment