ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்று நாட்களே முடிவடைந்துள்ள நிலையில் அங்கு சுமார் 262 மாணவர்கள் மற்றும் 160 ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வந்த சூழலில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதோடு பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. நோய் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு கொரோனா பரிசோதனைகளையும் துரிதப்படுத்தி வருகிறது. இதனிடையே கொரோனா பாதிப்பு குறைந்த மாநிலங்களில் மாநில அரசுகளில் விருப்பத்துக்கேற்ப பள்ளி கல்லூரிகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஆந்திராவில் கடந்த 2 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்று நாட்களிலேயே சுமார் 262 மாணவர்கள் மற்றும் 160 ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தெரிவித்துள்ள அம்மாநில பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வீரபத்ருது, ஆந்திராவில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு எண்ணிக்கை ஆபத்தானது அல்ல, இருப்பினும் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் நடைமுறையில் இருப்பதை உறுதி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பள்ளிகளில் பயிலும் சுமார் நான்கு லட்சம் மாணவர்களில் நேற்று 262 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது 0.1% சதவீதம் கூட இல்லை. அவர்கள் பள்ளிகளுக்கு வருவதால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று சொல்வது சரியானதல்ல. ஒவ்வொரு பள்ளி அறையிலும் 15 அல்லது 16 மாணவர்கள் மட்டுமே இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம் என தெரிவித்தார்.
மேலும் மாநிலத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு 9.75 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 3.93 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். இதில் ஆந்திராவில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் 1.11 லட்சம் ஆசிரியர்களில் சுமார் 160 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
-News7
No comments:
Post a Comment