மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

26/10/2020

மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு


 மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (ஓ.பி.சி.) 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன.


இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது.

மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. எனினும் இந்த குழுவின் பரிந்துரைகளை அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்துமாறும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

ஆனால் இந்த இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டு முதலே அமல்படுத்தக்கோரி தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த மனுக்கள் கடந்த 13-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா? என்றும், மத்திய அரசு மருத்துவ கல்லூரிகளில் இருப்பதை போல 27 சதவீத இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அளிக்க முடியுமா? என்பது குறித்தும் மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதி ல் அளிக்குமாறு உத்தரவிட்டு இருந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு கடந்த 15-ந்தேதி மீண்டும் அதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வக்கீல் கவுரவ் சர்மா, அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் தமிழகத்தின் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த சாத்தியமில்லை என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பாண்டு எப்படி நடைமுறைப்படுத்துவது? என்பது தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். பின்னர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இதனையடுத்து தமிழக அரசு, அ.தி.மு.க. மற்றும் கேவியட் மனுதாரர் டி.ஜி. பாபு சார்பில் எழுத்துபூர்வமான வாதங்கள் கடந்த 22-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459