படித்த பள்ளிக்காக ₹ 20 லட்சம் மதிப்புள்ள பேருந்தை வாங்கிக்கொடுத்த முன்னாள் மாணவர்கள் - ஆசிரியர் மலர்

Latest

02/10/2020

படித்த பள்ளிக்காக ₹ 20 லட்சம் மதிப்புள்ள பேருந்தை வாங்கிக்கொடுத்த முன்னாள் மாணவர்கள்

 


செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு கிராமத்தில் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, தாங்கள் பயின்ற பள்ளிக்காக 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மினி பேருந்து வாங்கி கொடுத்துள்ளனர். 

 

செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேடு கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 1980 முதல் 2005 வரை படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. ஏராளமான ஆளுமைகளை உருவாக்கியுள்ள இப்பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1700 பேர் படித்து வந்த நிலையில், தற்போது வெறும் 250 சொச்சம் பேரே படித்து வருகின்றனர். போதிய அளவில் போக்குவரத்து வசதி இல்லாதது, குறைவான ஆசிரியர்கள் எண்ணிக்கை இதற்கு காரணமாக முன்வைக்கப்பட்டது. 

 

இதனை கருத்தில் கொண்டு, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், சூனாம்பேடு முன்னாள் மாணவர் பேரவை என்ற வாட்ஸப் குரூப் ஒன்றை உருவாக்கிய முன்னாள் மாணவர்கள், அதில் தங்களது பள்ளிக்கான என்னெவெல்லாம் செய்யலாம் என்று ஆலோசித்து அதற்கான பணிகளை முன்னெடுத்தனர். 

 

போக்குவரத்து வசதி மிக அத்தியாவசிய தேவை என்பதால் முதற்கட்டமாக முன்னாள் மாணவர்கள் தங்களது செலவில் புதிய மினி பஸ் ஒன்றை வாங்கி பள்ளிக்காக அளித்துள்ளனர். 20 லட்சம் மதிப்புள்ள இப்பேருந்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். 

 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ - மாணவிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பள்ளியின் வளர்ச்சிக்காகவும் முன்னாள் மாணவ மாணவிகள் சார்பில் முன்னாள் மாணவர் பேரவை கல்வி அறக்கட்டளை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் மாணவர்கள் அளிக்கும் நிதியை பள்ளி வளர்ச்சிக்காகவும் பேருந்து இயக்கத்திற்கும் பயன்படுத்த தீர்மானித்து உள்ளனர்.10, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசும், அதேபோல் ஆசிரியர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு நினைவு பரிசும் முன்னாள் மாணவர்கள் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.-News18

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459