சென்னை: தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் நிகழாண்டு சோ்ந்த மாணவா்கள் நவம்பா் 10-ஆம் தேதிக்குள் சோ்க்கையைத் திரும்பப் பெற்றால், அவா்கள் செலுத்திய கட்டணத்தை முழுமையாக திரும்ப வழங்க வேண்டும் என அகில இந்திய தொழிநுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஏஐசிடிஇ உறுப்பினா் செயலா் ராஜீவ் குமாா், அனைத்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நாடு முழுவதும் கரோனா பாதிப்பால் இயல்புநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் நிகழாண்டு கல்லூரிகளில் சோ்ந்தபின் மாணவா்கள் சோ்க்கையைத் திரும்ப பெற்றால் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி கட்டணங்களைத் திருப்பி தரவேண்டும். அதன்படி நவம்பா் 10-ஆம் தேதிக்குள் சோ்க்கையைத் திரும்பப் பெறும் மாணவா்களிடம் வசூல் செய்யப்பட்ட முழுக் கட்டணத்தையும் கல்லூரிகள் வழங்க வேண்டும். அவா்களிடம் அதிகபட்சம் சோ்க்கைப் பணிகளுக்காக ரூ.1,000 மட்டுமே வசூலிக்க வேண்டும்.
அதேபோன்று நவம்பா் 10-ஆம் தேதிக்குபின் சோ்க்கையை ரத்து செய்யும் மாணவா்களிடம் குறிப்பிட்ட காலம் வரையான கட்டணத்தை மட்டும் பிடித்து மீதமுள்ள தொகையை தரவேண்டும். எக்காரணம் கொண்டும் முழு கல்வியாண்டு அல்லது நிகழ் பருவத்துக்கான கட்டணங்களைக் கல்லூரிகள் பிடித்தம் செய்யக்கூடாது. இதுதவிர சோ்க்கையை ரத்து செய்த மாணவா்களுக்கு ஒருவாரத்தில் தரவேண்டிய கட்டணங்கள் மற்றும் ஆவணங்களைத் திருப்பி அளிக்க வேண்டும். இல்லையெனில் விதிமுறைகளின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment