அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம் : நீதிமன்றத்தில் காரசாரமான விவாதம் - ஆசிரியர் மலர்

Latest

09/09/2020

அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம் : நீதிமன்றத்தில் காரசாரமான விவாதம்

சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கொரோனா ஊரடங்கினால் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து பிற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும், இது அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் பொருந்தும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு, பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) விதிகளுக்கு எதிரானது. இவ்வாறு அனைவரும் தேர்வில் தேர்ச்சிப்பெற்று விட்டதாக அறிவிக்க உயர்கல்வித்துறைக்கு அதிகாரம் இல்லை. எனவே இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சார்பில் இதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழக அரசின் இந்த உத்தரவு தமிழக கல்வித்தரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். பல்கலைக்கழகங்களின் மாண்பு கெடும். 25 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்வில் தோல்வியடைந்தவர்களையும், 25 பாடங்களுக்கும் மேலாக அரியர் வைத்துள்ள மாணவர்களையும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற வைப்பது என்பது ஏற்புடையதல்ல.
தேர்வை தன்னம்பிக்கையுடன் எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர்களின் மனஉறுதி மேம்படும். சர்வதேச அளவில் போட்டியிடும் அளவுக்கு மாணவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். சிண்டிகேட், செனட் மற்றும் அகாடமிக் கவுன்சில் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வு நடைமுறைகளில் தமிழக அரசு தலையிட்டு அறிவிப்பை வெளியிட முடியாது. எனவே இதுதொடர்பான அரசாணைக்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த 2 வழக்குகளையும் நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், “பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளை பின்பற்றி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதியளித்துள்ளது. யு.ஜி.சி.யின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும்பட்சத்தில் தான் அதில் பிரச்சினை ஏற்படும். ஆனால் அரியர் தேர்வுகளை ரத்துசெய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் அதுபோல வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்படவில்லை” என்று வாதிட்டார். மனுதாரர்கள் தரப்பில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என்று வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தமிழக அரசு, யு.ஜி.சி. ஆகியவை 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459