ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு - ஆசிரியர் மலர்

Latest

01/09/2020

ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு




சென்னை உயர்நீதிமன்றம்

ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரிய வழக்கை தேதி குறிப்பிடாமல்  தீர்ப்புக்காக சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா மற்றும்
விமல் மோகன் ஆகியோர் ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்கக் கோரி தனித்தனியாக வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் ஆன்லைன் வகுப்புகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை எப்படி பின்பற்றப்படுகிறது? மலைப்பகுதி மாணவர்களுக்கு எப்படி கல்வி வழங்கப் போகிறார்கள்? தனியார் பள்ளிகள் முன்கூட்டியே பதிவு செய்து வகுப்புகளை நடத்துவது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது அரசுத் தரப்பில், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வழிகாட்டு விதிமுறைகள் அமல்படுத்துவது தொடர்பாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், முன்கூட்டியே பதிவு செய்த வகுப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிகள் தான் முடிவு எடுக்க வேண்டும்.  மலைவாழ் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக கல்வி வழங்கப்படுகிறது. தனியார் தொலைக்காட்சிகள் மூலமாகவும் கல்வி கற்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான  வழிகாட்டு விதிமுறைகளை பள்ளிகள் முறையாக பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க அமைப்பை உருவாக்க வேண்டும். மாணவர்கள் ஆபாச இணையதளங்களுக்குள் நுழைய முடியாதபடி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459