டெல்லி: 2019-2020-ம் நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. பி.எப். எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில், ஆறு கோடிக்கும் அதிகமான ஊழியர்களின், ‘டிபாசிட்’ உள்ளது. தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு, எவ்வளவு வட்டி அளிப்பது என்பதை, ஒவ்வொரு ஆண்டும், சி.பி.டி., எனப்படும், மத்திய அறங்காவலர் வாரியம் நிர்ணயம் செய்யும். அதன்படி, மத்திய அறக்கட்டளை வாரிய கூட்டம் மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்க்வார் தலைமையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 2019-2020-ம் நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.5 சதவீத வட்டி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொதுமுடக்கத்தால் வட்டியை வழங்க இயலவில்லை.
இந்த நிலையில், மத்திய அறக்கட்டளை வாரியத்தின் கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சக அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டபடி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 2019-2020-ம் நிதி ஆண்டில் 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டதாக தொழிலாளர் நல அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது. இதில், 8.15 சதவீத வட்டியை உடனடியாகவும், எஞ்சிய 0.35 சதவீத வட்டியை வரும் டிசம்பரிலும் வழங்க முடிவு செய்யப்பட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment