கொரோனாவை எதிர்க்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்கள் : ஊட்டச்சத்து நிபுணர்கள் அட்வைஸ் - ஆசிரியர் மலர்

Latest

09/08/2020

கொரோனாவை எதிர்க்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்கள் : ஊட்டச்சத்து நிபுணர்கள் அட்வைஸ்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் என்றால், கொரோனா வந்துபோனதே தெரியாமல் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியால் மீண்டவர்கள் பலர். இதுகுறித்து ஊட்டச்சத்து ஆலோசகர் மீனாட்சி பஜாஜ் பேசுகையில், “ `ஒருமுறை கொரோனா வந்தவர்களுக்கு மறுபடியும் வராது’ என்கிறது ஓர் ஆராய்ச்சி, `இல்லையில்லை, வருவதற்கு வாய்ப்பிருக்கிறது’ என்கிறது இன்னோர் ஆராய்ச்சி. ஒருமுறை கொரோனா வந்ததால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி எத்தனை மாதங்கள் நம் உடலில் இருக்கும் என்பதும் இன்னும் சரிவர தெரியவில்லை. அதனால், நம் தினசரி உணவுகளின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வதுதான் இப்போதைய தீர்வு. அதே நேரம் நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். உணவுகளால் கொரோனாவை சரி செய்ய முடியாது. ஆனால், கொரோனா வைரஸின் தாக்கத்தைக் குறைக்க முடியும்’’ என்றவர் அவற்றைப் பட்டியலிட்டார்.

ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்

* `வைட்டமின் ஏ’ சத்து நிறைந்த பால், பால் பொருள்கள், ஈரல், பப்பாளி, கேரட், மாம்பழம், போன்ற உணவுப்பொருள்களில் ஒன்றிரண்டாவது தினமும் சாப்பிட வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்படி காட்லிவர் ஆயில் மாத்திரையும் சாப்பிடலாம்.
* `வைட்டமின் டி’ செறிவூட்டப்பட்ட பால், எண்ணெய் வகைகளை சாப்பிடுங்கள். சீஸ் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவிலும் இந்த வைட்டனின் இருக்கிறது. தினமும் முற்பகல் 11 மணியில் இருந்து 2 மணிக்குள்ளாக 15-20 நிமிடங்கள் சூரியஒளியில் நின்றால், உங்கள் உடம்பு தனக்குத் தேவையான `வைட்டமின் டி’ யை தானே உருவாக்கிக்கொள்ளும்.
* `வைட்டமின் சி’ நிறைந்த தக்காளி, நெல்லிக்காய், கொய்யா, குடைமிளகாய் ஆகியவற்றைப் பச்சையாக சாப்பிட வேண்டும்.
ஃபிரெஷ் முருங்கைக்கீரை சாறும் குடிக்கலாம். நன்கு வளர்ந்தவர்களுக்கு நாளொன்றுக்கு 40 முதல் 80 மில்லி கிராம் வரைக்கும் `வைட்டமின் சி’ தேவைப்படும். நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்ட வேண்டுமென்றால், நாளொன்றுக்கு 500 மில்லிகிராம் `வைட்டமின் சி’ எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு கொய்யாப்பழம், ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே போதும். ஒரு கொய்யாவில் மட்டும் 200 மில்லிகிராமுக்கு மேலே `வைட்டமின் சி’ சத்து இருக்கிறது. நெல்லிக்காயைப் பச்சையாகவும் சாப்பிடலாம், ஜூஸாக குடிக்கலாம். சட்னியுடன் போட்டு அரைக்கலாம், ஆனால், அரைத்த சட்னியை, தாளித்துக் கொதிக்க வைத்து விட்டீர்களென்றால், `வைட்டமின் சி’ ஆவியாகிவிடும், கவனம்.

கொய்யா

* பேரீச்சம் பழத்தில் இருக்கிற இரும்புச்சத்தைவிட, முருங்கைக்கீரை, கொள்ளு, கேழ்வரகு, பொட்டுக்கடலை, எள், கறுப்பு கொண்டைக்கடலை, ஓட்ஸ், ஆட்டு ரத்தம் மற்றும் ஈரலில் இரும்புச்சத்து அதிகம். இவற்றில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
* ஓரக் வேல்யூ (orac value ) என்பது நம் உடலில் எதிர்ப்பு சக்தி கூட்டுகிற தன்மை. இந்தத் தன்மை முருங்கைக்கீரை, கோகோ, சீரகம், பட்டை, மஞ்சள்தூள் ஆகியவற்றில் அதிகம் இருக்கிறது. கோகோவை சாக்லேட்ஸ் வழியாக எடுத்துக்கொள்ளலாம். குழம்பு வகைகளில் பட்டை தாளித்துப் பயன்படுத்தலாம். பாலில் மஞ்சள் தூள் சேர்த்துக் குடிக்கலாம். ஒருநாளைக்கு அதிகபட்சமாக 4 சிட்டிகை மஞ்சள்தூள்தான் பாலுடன் கலந்து குடிக்கவேண்டும்.

முருங்கைக்கீரை

* `வைட்டமின் பி 6’ சத்து எல்லா கடலை வகைகளிலும், வாழைப்பழத்திலும் உண்டு. இவற்றையும் சாப்பிட மறந்துவிடாதீர்கள்.
* பால், முட்டை, கோழியில் தரமான புரதம் கிடைக்கும். அரிசியையும் பருப்பையும் சேர்த்து இட்லியாகவோ, தோசையாகவோ சாப்பிடும்போது ஓரளவுக்குத் தரமான புரதச்சத்து கிடைத்துவிடும். பயறு வகைகள், நட்ஸ் வகைகள், சோயாவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட புரதம், பட்டாணியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட புரதம் ஆகியவை சைவம் சாப்பிடுபவர்களுக்கான புரத சாய்ஸ்.

முட்டை

* கறுப்பு கொண்டைக்கடலை, மொச்சை, பச்சைப்பயிறு, ராஜ்மா போன்றவற்றை முளைக்கட்டி அல்லது ஊறவைத்தால், அதிலிருக்கிற பைடேட் (phytate ) எனும் ஆன்ட்டி நியூட்ரிஷியன்ஸ் ஃபேக்டர் இன்ஆக்டிவ் ஆகும். அப்போதுதான், நமக்கு ஸிங்க் சத்து கிடைக்கும். ஸிங்க் பாதாம் பருப்பிலும் இருக்கிறது. அது நமக்கு முழுமையாகக் கிடைக்க வேண்டுமென்பதற்காகதான் பாதாமை ஊறவைத்துச் சாப்பிடச் சொல்கிறோம். தவிர, கோதுமையிலும், சாக்லேட்டில் இருக்கிற கோகோவிலும் நிறைய ஸிங்க் உண்டு.
* கீரைகள், சுண்டல் வகைகள், ஆளிவிதை, வெந்தயம், மீன், வால்நட் , உளுந்தங்களி போன்றவற்றில் ஓமேகா த்ரீ ஃபேட்டி ஆசிட் இருக்கிறது.

வால்நட்

* குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், இதற்கு புரோ பயாட்டிக் மற்றும் ப்ரீபயாட்டிக் வேண்டும். ஓட்ஸ், வாழைப்பழம், வெங்காயம், பூண்டு ஆகியவற்றில் இருக்கிற ப்ரீபயாட்டிக் குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குபவை. புளித்தத் தயிரில் புரோ பயாட்டிக் இருக்கிறது. புரோபயாட்டிக் தயிர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. இவையிரண்டும் சேர்ந்து குடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். குடல் ஆரோக்கியமாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். எண்ணெயில் பொரித்த, நிறைய நெய், வெண்ணெய் சேர்த்த உணவுகள், டால்டா, மைதா, சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* முட்டை, காளான், கடல் சிப்பி, பூண்டு, பிரேசில் நட்ஸ் ஆகியவற்றில் செலினியம் சத்து இருக்கிறது.

பூண்டு

* தக்காளி ரசத்தில் லைகோபீன் கிடைக்கும். இதுவும் நோய் எதிர்ப்பு சக்திக்கானதுதான்.
* 12 வயதுக்குக் கீழ் இருக்கிற குழந்தைகளுக்கு ஒரு நாள் விட்டு ஒருநாள் ஒரு டீஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் கொடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய்

* நாளொன்றுக்கு கருஞ்சீரகம் 2 முதல் 4 சிட்டிகை அளவு உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
* 3 முதல் 5 துளசியிலைகளைத் தினமும் சாப்பிடுங்கள்.
Also Read:
* இந்தக் காலகட்டத்தில் விரதம் இருப்பது, டயட் இருப்பது போன்றவற்றைச் செய்யக்கூடாது. லிக்விட் டயட், க்ராஸ் டயட் கூடவே கூடாது. உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்றால், நடைப்பயிற்சி செய்யுங்கள். டயட் வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459