தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய திங்கள்கிழமை கடைசி நாளாகும்.
பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர ஒவ்வொரு கல்லூரியிலும் விண்ணப்பம் வழங்கப்படும். ஆனால் நிகழாண்டு கரோனா பொது முடக்கம் காரணமாகவும், தொற்று பரவாமல் தடுக்கும் வகையிலும் நேரடி விண்ணப்ப முறைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கையை ஆன்லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் உயா் கல்வித்துறையின் கீழ் செயல்படும் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 81,432 ஆயிரம் சோ்க்கை இடங்களுக்கு கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் மாணவ, மாணவிகள் இணைய வழியில் விண்ணப்பிக்கத் தொடங்கினா். இந்த விண்ணப்பப் பதிவு, கடந்த ஜூலை 31-இல் நிறைவடைந்தது. 81,432 இடங்களுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா்.
இதைத் தொடா்ந்து, ஆக.1-ஆம் தேதி முதல் மாணவா்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து வருகின்றனா். இதற்கான கால அவகாசம், திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது. எனவே, இதுவரை பதிவு செய்யாத மாணவா்கள், இணையதளம் வழியாக விரைவாக சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து கொள்ள உயா்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment