10-ம் வகுப்பு மாணவர்கள் : விரும்பிய பாடப்பிரிவு எடுக்கமுடியுமா? - ஆசிரியர் மலர்

Latest

09/08/2020

10-ம் வகுப்பு மாணவர்கள் : விரும்பிய பாடப்பிரிவு எடுக்கமுடியுமா?


தமிழகத்தில் 10-ஆம் வகுப்பிற்கு, காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், திங்கட்கிழமை இறுதித்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. 11-ம் வகுப்பில் விரும்பும் பிரிவை எடுக்க முடியுமா என மாணவர்கள் இடையே குழப்பம் எழுந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு ரத்து செய்தது. கல்வியாளர்கள் மேல்மட்ட குழு ஆலோசனையின்படி, 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவிகிதமும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவிகிதமும் இறுதித்தேர்வு மதிப்பெண்களாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், திங்கட்கிழமை இறுதித்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை தவறவிட்ட மாணவர்களுக்கு 11-ம் வகுப்பில் விரும்பும் பிரிவை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த தேர்வுகளை எழுதிய மாணவர்களும், மதிப்பெண்கள் எவ்வாறு வரப்போகிறதோ என குழப்பத்தில் உள்ளனர். அதே சமயம், பொதுத்தேர்வு நடைபெற்றிருந்தால், கூடுதல் மதிப்பெண் பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்து, விரும்பிய பிரிவுகளை தேர்ந்தெடுத்திருக்கலாம் எனவும் மாணவர்கள் கூறுகின்றனர்.
பொதுத்தேர்வு நடக்காத நிலையில், மாணவர்கள் விரும்பும் பிரிவை கொடுப்பதே சிறந்தது என ஆசிரியர் ராஜ்குமார் கூறுகிறார்.
காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை தவறவிட்ட மாணவர்களுக்கு அடிப்படை தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கக வட்டாரத்தில் கூறப்படுகிறது. மதிப்பெண்களில் ஏதேனும் குளறுபடி இருந்தால் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர் வாயிலாக வரும் 17-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459