அரசு பள்ளிக்கு படையெடுக்கும் பெற்றோர் - ஆசிரியர் மலர்

Latest

26/07/2020

அரசு பள்ளிக்கு படையெடுக்கும் பெற்றோர்



“கொரோனா காலகட்டத்தில், கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது” என ஏற்கெனவே தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையிலும், சில தனியார் பள்ளி நிறுவனங்கள் கல்விக் கட்டணம் செலுத்தக்கோரி பெற்றோர்களுக்கு மறைமுக அழுத்தம் கொடுத்துவந்தன. இந்நிலையில், நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவையடுத்து, `கல்விக் கட்டணம் செலுத்தச் சொல்லி’ நேரடியாகவே பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன தனியார் பள்ளிகள்.
“கொரோனா காலகட்டத்தில், வருமானமின்றி வாடிக்கிடக்கும் பெற்றோரிடம் கல்விக் கட்டணம் கேட்டு தனியார் பள்ளி நிறுவனங்கள் துன்புறுத்தினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக அரசு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்துத் தனியார் பள்ளிகள், நீதிமன்றத்தை நாடின. இந்த வழக்கில்தான், “40 சதவிகிதம் கல்விக் கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம்” என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



சென்னை உயர் நீதிமன்றம்
இதுகுறித்துப் பேசும் பெற்றோர்கள், “கொரோனா ஊரடங்கினால், வருமானமின்றி அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றவே தவித்து வருகிறோம். இந்தநிலையில்தான் தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவையும் கண்டுகொள்ளாமல், கல்விக் கட்டணம் வசூலிப்பதில் கறாராக இருந்துவந்தன. ஆனால், `கட்டணம் வசூலிக்கக் கூடாது’ என்று அரசு உத்தரவு பிறப்பித்த பிறகு அந்தப் பள்ளிகள் கொஞ்சம் அமைதியாக இருந்தன. இந்தநிலையில், நீதிமன்றமே இப்போது கட்டணம் வசூலிக்கச் சொல்லி உத்தரவு போட்டுவிட்டது.
சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கும் நாங்கள் எப்படி ஆயிரக்கணக்கான ரூபாயைக் கட்டப்போகிறோம் என்றே தெரியவில்லை. பிள்ளைகளை அரசுப் பள்ளிகளுக்கே மாற்றிவிடலாம் என்றாலும்கூட, பள்ளிக்கூடம் எப்போது திறக்கும் என்றே அரசு இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை. அதனால், தனியார் பள்ளிகளிலிருந்து மாற்றுச் சான்றிதழையும் வாங்க முடியாமல் தவித்துவருகிறோம். இப்படி மாற்று சான்றிதழை நாங்கள் வாங்காமலே இருப்பதால், `உங்கள் குழந்தை ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுத்து வருவதால், நீங்கள் கட்டாயம் கல்விக் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும்; இல்லையெனில், ஆன்லைன் வகுப்பை கட் செய்துவிடுவோம்’ என்று சொல்லி மிரட்டுகிறார்கள். தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் செலுத்தி பிள்ளைகளைத் தொடர்ந்து படிக்க வைக்கவும் முடியவில்லை. மாற்றுச் சான்றிதழை வாங்கிக்கொண்டு அரசு பள்ளிகளில் சேர்த்துவிடவும் வழியில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை… அரசுதான் இப்பிரச்னையில் நல்லதொரு முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும்” என்று கலங்குகிறார்கள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459