தமிழகத்தில் 2.63 லட்சம் இன்ஜினியரிங் இடங்களுக்கு அனுமதி :AICTE - ஆசிரியர் மலர்

Latest

29/07/2020

தமிழகத்தில் 2.63 லட்சம் இன்ஜினியரிங் இடங்களுக்கு அனுமதி :AICTE

சென்னை: பி.இ., பி.டெக்., படிக்க 2.63 லட்சம் மாணவர்களை சேர்க்க தமிழகத்துக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 500 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவையும் அடங்கும். மொத்தமுள்ள 500 இன்ஜி., கல்லூரிகளில், இந்த கல்வியாண்டில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 184 மாணவர்களை சேர்ப்பதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளது. மேலும் தமிழகத்தில் புதிதாக 3 இன்ஜி., கல்லூரிகள் தொடங்கவும், அவற்றில் 1,080 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், தமிழகத்தில் பட்டய படிப்புகளில் (டிப்ளமோ) 496 கல்வி நிறுவனங்களில், ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 371 இடங்களில் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எம்.இ., எம்.டெக்., முதுகலை பட்டப் படிப்புகளில், 358 கல்வி நிறுவனங்களில் 30 ஆயிரத்து 306 இடங்களிலும், எம்.பி.ஏ., பட்டப்படிப்பில் 350 கல்வி நிறுவனங்களில், 29 ஆயிரத்து 786 இடங்களிலும், எம்.சி.ஏ., பட்டப்படிப்பில், 183 கல்வி நிறுவனங்களில் 10 ஆயிரத்து 606 இடங்களிலும் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
179 தொழிற்கல்வி நிலையங்கள் மூடல்
இந்தியாவில் 2020-21ம் கல்வியாண்டில் இன்ஜி., உள்பட 179 தொழிற்கல்வி நிலையங்கள் மூடப்படுவதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இது மிகப்பெரிய எண்ணிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 179 தொழிற்கல்வி நிலையங்களில் 134 கல்வி நிலையங்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக போதுமான மாணவர் சேர்க்கையை பெறாததால், இந்த கல்வியாண்டில் நீட்டிப்புக் கோரி விண்ணப்பிக்கவே இல்லை. மேலும் 44 கல்வி நிலையங்கள், உரிமம் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால், உரிமம் மறுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459