ஆன்லைன் வகுப்புகளில் செய்யக்கூடியவை..... செய்யக்கூடாதவை.... நிபுணர்கள் வழிகாட்டல் - ஆசிரியர் மலர்

Latest

05/06/2020

ஆன்லைன் வகுப்புகளில் செய்யக்கூடியவை..... செய்யக்கூடாதவை.... நிபுணர்கள் வழிகாட்டல்


கொரோனா தொற்று அபாயத்தால் பள்ளிகளுக்குக் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டதால், பொதுத்தேர்வை முன்னிட்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது 2020-2021 கல்வியாண்டு தொடங்கிவிட்டதை அடுத்து, எல்.கே.ஜியிலிருந்து அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க ஆரம்பித்திருக்கின்றன தனியார் பள்ளிகள். அரசுப் பள்ளிகளும் அதற்கான முயற்சிகளில் இருக்கின்றன.
பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகிற வீடுகளில் மாணவர்கள் தனியாக ஆன்லைன் வகுப்பு அட்டெண்ட் செய்வதில் இருக்கிற சிக்கல், கேட்ஜெட் வசதியற்ற வீடுகள், ஆன்லைன் வகுப்பு அட்டெண்ட் செய்ய வீட்டில் டிவி இல்லாததால் தற்கொலை செய்துகொண்ட கேரள மாணவி என்று ஆன்லைன் வகுப்பு தொடர்பான சிக்கல்கள் தினமொன்றாக வந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சூழலைப் பெற்றோர்கள் எப்படி எதிர்கொள்வது என்று சொல்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.



கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

’’ஆன்லைன் வகுப்புகள், ரெகுலர் வகுப்புகளுக்கு மாற்று இல்லை. அதனால், ‘ஆன்லைன் வகுப்புகளுக்கு என் பிள்ளையை அனுமதிக்க முடியாது’ என்று பெற்றோர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ‘ஆன்லைன் வகுப்பு என்பது சாத்தியமில்லாத விஷயம். நான் ரெகுலர் வகுப்புகளுக்குத்தான் என் பிள்ளையை அனுப்ப முடியும். நான் ரெகுலர் வகுப்புகளுக்குத்தான் ஃபீஸ் கட்டியிருக்கிறேன்’ என்று பள்ளி நிர்வாகத்திடம் பேச வேண்டும்.
குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் பரிந்துரைக்கத்தக்கதல்ல. ஒரு மாணவர் தொடர்ந்து மொபைல் போனையோ, லேப்டாப்பையோ பார்த்துக்கொண்டே இருந்தால், அதிலிருந்து வரக்கூடிய ஒளிக்கற்றைகள் அவர்களுடைய கண்களை நிச்சயம் பாதிக்கும். சிறு வயதிலேயே கண்ணாடி போட வேண்டி வரலாம்.



online class

மேலும், நேரடி மேற்பார்வையில்லாமல் குழந்தைகளின் கவனத்தைக் குவிக்கவைப்பதும் சாத்தியமில்லாத விஷயம்.
ஆன்லைனில் குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூனையோ படத்தையோ பார்ப்பது என்பது வேறு. பாடத்தைக் கேட்க வேண்டும், எக்ஸாம் எழுத வேண்டும் என்பது வேறு. இதைப் பள்ளி நிர்வாகமும் புரிந்துகொள்ள வேண்டும், பெற்றோர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
வகுப்பில் மாணவர்களுக்கு ஒரு பாடத்தை அறிமுகப்படுத்தும்போது, ஒரு குழந்தைக்கு அது விருப்பமானதாக இருந்தால் புரிந்து படிக்கும், இல்லையென்றால் விட்டுவிடும். அப்படி அது ஆர்வம் இழப்பதை, ஆசிரியர் கவனித்து சரிசெய்வார். மேலும், அந்தப் பாடத்தில் ஒரு தேர்வு வைக்கும்போது, அந்தக் குழந்தை மதிப்பெண் குறைவாக எடுத்தால், அந்தக் குழந்தைக்குக் குறிப்பிட்ட அந்தப் பாடம் புரியவில்லை என்பதை அறிந்துகொள்ளலாம். உடனே ஆசிரியர், அக்குழந்தை அதை ஓவர்கம் செய்வதற்கு உதவுவார். இதுதான் சரியான அணுகுமுறை.
ஆனால், பெற்றோர் கம்ப்யூட்டரை ஆன் செய்து பிள்ளையிடம் கொடுக்க, நேரடி மேற்பார்வையில்லாமல் ஆசிரியர் பாடம் நடத்த ஆரம்பிக்கும்போது, குழந்தையால் எப்படி தொடர்ந்து 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம்வரை அந்த வகுப்பில் தன்னை இணைத்துக்கொள்ள முடியும்? மேலும், இரண்டு பேருமே வேலைக்குப் போகிற பெற்றோர் என்றால், ஐந்தாம் வகுப்புக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டெக்னிக்கலாக ஆன்லைன் வகுப்பில் கனெக்ட் ஆவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் யாரிடம் உதவி கேட்க முடியும்? அப்படியே கனெக்ட் ஆனாலும், அதன் மனம் வகுப்பில் கனெக்ட் ஆகுமா?



online class for kids

Also Read:
இதைவிட முக்கியமான விஷயம், வேலைக்குப் போகிற பெற்றோர்களின் பிள்ளைகள் வீட்டில் தனியாக கம்ப்யூட்டர், சார்ஜர், இணைய வசதிக்கான டிவைஸ்கள் என்று மின்சாதனங்களைக் கையாளும்போது, ஷாக் அடிப்பது, ஓவர் ஹீட்டானதால் ஸ்மார்ட்போன், டேப் வெடிப்பது போன்ற மின் விபத்துகள் ஏற்பட்டால் என்ன செய்வது?
ஆக, இந்த ஆன்லைன் வகுப்புகளால் பிள்ளைகளின் மனநலனுக்கும் பாதுகாப்பில்லை, உயிருக்கும் உத்தரவாதமில்லை.
இவற்றையெல்லாம் யோசித்து, பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை தங்கள் பிள்ளைகள் படிக்கிற பள்ளி நிர்வாகத்திடம் சொல்ல வேண்டும். ஒருவேளை மேலேயுள்ள விஷயங்களை எல்லாம் நீங்கள் சொல்லியும் உங்கள் பிள்ளைகள் படிக்கிற பள்ளியில் ஏற்கவில்லை என்றால், ‘ஆன்லைன் வகுப்பால் மாணவர்களின் மனநலனுக்கு எந்தவிதக் கெடுதலும் வராது’ என்று ஓர் உளவியல் நிபுணரிடம் எழுதி வாங்கித் தரச்சொல்லுங்கள். அதேபோல, ‘ஒளி உமிழும் கேட்ஜெட் திரைகளைத் தொடர்ந்து பார்த்தாலும் மாணவர்களின் கண்களுக்கு எந்தவிதத் தீங்கும் நிகழாது, மின் விபத்துகள் எதுவும் ஏற்படாது, தனியாக வீட்டிலிருக்கும் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளலாம்’ என்று ஒரு குழந்தை நல மருத்துவரை பள்ளியின் சார்பாக எழுதிக்கொடுக்கச் சொல்லுங்கள்’ என்றும் கேளுங்கள்.  
ஆன்லைன் வகுப்புகள் அடிப்படையிலேயே தவறு எனும்போது, ‘வீட்டில் கேட்ஜெட் இல்லை, அதனால் பிள்ளையால் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியவில்லை’ என்று மற்ற காரணங்களையெல்லாம் சொல்லி விலக்குக் கேட்கத் தேவையே இல்லை. ஒருவேளை இதைக் கட்டாயப்படுத்தினால், கேரள மாணவியின் முடிவுபோல, இன்னும் பல காரணங்களால் பல விபத்துகள் நடக்க வாய்ப்புள்ள அச்சம் பற்றிக்கொள்கிறது…” என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.



மனநல மருத்துவர் பூங்கொடி பாலா

“கல்வி என்பது வெறும் பாடங்களைப் படிப்பது மட்டுமல்ல; பள்ளிக்கூடத்துக்குச் சென்று அங்கு தனக்கென நண்பர்களை உருவாக்கிக் கொள்வது, ஒரு பொறுப்பை எடுத்துச் செய்கிற தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்வது, ஆசிரியர் சொல்வதற்குக் கீழ்ப்படிவது, தானாகவே சாப்பிடுவது, குறிப்பிட்ட நேரத்துக்குள் எழுதி முடிப்பது, நண்பர்களுடன் குட்டிக் குட்டி சண்டைகள் வரும்போது அதை எப்படி சமாதானத்துக்குக் கொண்டுவருவது என்று வாழ்கைப்பாடம் படிப்பது, ஆசிரியர் திட்டினால் அதை எப்படி எதிர்கொள்வது என்று பழகுவது, படிப்பில் ஒரு தோல்வி வந்தால் அதை அணுகக் கற்றுக்கொள்வது என்று… இவற்றையெல்லாம் பாடங்களுடன் சேர்த்துக் கற்றுக்கொள்வதுதான் கல்வி
. பாடங்களின் மூலம் பெறும் அறிவு 50% தான். நான் மேலே சொன்ன மற்ற திறமைகளும் சேர்ந்தால்தான் ஒரு மாணவன் 100% குடிமகனாக ஒரு பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வர முடியும்.
தற்போது கொரோனோ பயம் காரணமாக, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாது. அதனால் சம்திங் இஸ் பெட்டர் தென் நத்திங் என்ற அடிப்படையில்தான் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அதே நேரம் ஆன்லைன் வகுப்புகளில் குழந்தைகள் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தால் நான் மேலே சொன்ன, சமுதாயத்துடன் இணைந்து வாழ்கிற அந்த சோஷியல் ஸ்கில்ஸ் குழந்தைகளிடம் வளராமல் போய்விடும்.
இந்த லாக்டெளன் காலத்தில் குழந்தைகள் கேட்ஜெட் உடன்தான் பெரும்பான்மையான நேரத்தைக் கழிக்கிறார்கள். இப்படி முழுமையாகப் படிப்பிலிருந்து விடுபட்டு, விளையாடுவதற்காக கேட்ஜெட்டில் செலவழிக்கிற நேரத்தில் பாதியை ஆன்லைன் வகுப்புகளுக்கு அவர்களை செலவிடவைக்கலாம். மற்றபடி பள்ளிக்கூடத்தில் இருப்பதுபோல காலை முதல் மாலைவரை ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களை உட்கார வைப்பது ஏற்புடையது இல்லை. குறிப்பாக, கிண்டர்கார்டன் குழந்தைகளுக்கு ஆன்லைன் க்ளாஸ் வைப்பது கூடவே கூடாது. ப்ரைமரி ஸ்கூல் குழந்தைகளுக்குமேகூட, தினமும் ஒன்று அல்லது இரண்டு மணி நேர ஆன்லைன் வகுப்புகளே பரிந்துரைக்கக்கூடியது
. அதற்கு மேல் அட்வைஸபிள் இல்லை.
Also Read:
ஒரு ஆறு மாதங்கள் பள்ளிக்கூடம் செல்லாமல் இருப்பதால் குழந்தைகளின் கல்வியில் எந்தப் பெரிய பின்தங்கலும் ஏற்பட்டுவிடாது. மேலும், அவர்களை நாள் முழுக்க ஆன்லைன் வகுப்புகளில் உட்கார வைத்தால் மன அழுத்தம் ஏற்படலாம். வீட்டில் கேட்ஜெட் இல்லை, இரண்டு பிள்ளைகளுக்கு இரண்டு கேட்ஜெட்கள் இல்லை போன்ற காரணங்களால் பெற்றோர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படலாம்.
ஒரு மாணவரின் வீட்டில் கேட்ஜெட், இணையம் போன்றவற்றுக்கான வசதி இருக்கும். இன்னொரு மாணவர் வீட்டில் அந்தளவுக்குப் பொருளாதார வசதியில்லாமல் இருக்கலாம். அப்படியென்றால், வசதி இருக்கிற மாணவர்கள்தான் ஆன்லைன் வகுப்பில் படிக்க முடியும். அது இயலவில்லையென்றால், தாழ்வுமனப்பான்மை, இயலாமை, மன அழுத்தம் என்று மாணவர்களுக்கு இது ஏற்படுத்தக்கூடிய பிரச்னைகள் நிறைய. அப்படி ஒரு சூழலில்தான் கேரள மாணவியை நாம் இழந்துள்ளோம். தன் உயிரை விலையாகக் கொடுத்து அவள் நமக்குச் சொல்லிச் சென்றிருப்பது பெரிய பாடம். அதையும் நாம் கண்டும் காணாமல் கடந்தால்… ‘படிப்புதான் முக்கியம்’ என்று அதை நாம் குழந்தைகளின் உடல்நல, மனநல ஆரோக்கியத்துக்கும் மேலாக தூக்கிவைத்துக்கொண்டிருப்பதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். சுவர் இருந்தால்தான் சித்திரம்” என்கிறார் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459